தமிழ் சினிமாவில் நாட்டிய பேரொளி என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் நடிகை பத்மினி. புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போன்றவர்களுடன் அதிக படங்களில் நடித்தவர். குறிப்பாக தில்லானா மோகனாம்பாள் படத்தில் நாதஸ்வர கலைஞராக சிவாஜி கணேசனும் நாட்டிய கலைஞராக பத்மினியும் நடித்து பெரிய வரவேற்பை பெற்றனர்.
பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை பத்மினி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குறித்து கூறியதாவது, சிவாஜி கணேசன் இறப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து அவரைப் பார்க்கப் போயிருந்தேன். சிவாஜி மெலிந்து ஆள் மாறிப் போயிருந்தார்.
தண்ணீர் கூட அவர் விருப்பத்திற்கு குடிக்க முடியாது. ஒரு நாளைக்கு ஒரு கிளாஸ் தண்ணீர்தான். கொஞ்சம் கூடக் குடித்தாலும் உடம்பில் தண்ணீர் கட்டி உப்பிவிடும், ஆகவே மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சிவாஜி மாடியிலேயே தங்கியிருந்தார். கீழே வருவதில்லை. அவரைப் பார்ப்பவர்கள் மேலே போய் பார்த்துவிட்டு அப்படியே போய் விடுவார்கள்.
சிவாஜி சாப்பாட்டுப் பிரியர், என்னைப் போலவே. அவருக்கு விருப்பமான அத்தனை அயிட்டமும் எனக்கும் பிடிக்கும். அன்று டைனிங் மேசை நிறைய சாப்பாட்டு வகைகள் இருந்தன. காடை, கௌதாரி, கோழி, ஆடு, மீன், இறால் என்று எனக்குப் பிடித்தமான அத்தனை கறி வகைளும் சமைத்திருந்தார்கள்.
ஆனால் அதில் ஒன்றைக்கூட சிவாஜி உண்ண முடியாது. அப்படியும் என் ஒருத்திக்காக அவ்வளவு சமைத்திருந்தார்கள். சிவாஜியை ஒரு நாற்காலியில் உட்காரவைத்து நாலு பேர் அவரை மாடியில் இருந்து தூக்கி வந்தார்கள். அவர் எனக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டு அன்புடன், சாப்பிடம்மா, சாப்பிடு. நல்லா சாப்பிடு என்றார்.
உணவின் சுவை அறிந்தவர் அதை ருசிக்க முடியாத கொடுமை. அவருக்குப் பிடித்தமான அத்தனை உணவையும், வெறுமனே பார்த்தபடி இருந்தார். ஆனால் என்னால் சாப்பிட முடியவில்லை என்று அந்த நேர்காணலில் நடிகை பத்மினி வேதனையாக கூறியிருக்கிறார். சிவாஜி கணேசன் ஒரு அசைவ பிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





