சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் பிரஸ்மீட்டில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தன் மீதான விமர்சனங்கள் குறித்து அவர் தெளிவாக விளக்கம் அளித்தார். திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தது நட்புரீதியாக மட்டுமே என்றும் கொளத்தூர் தொகுதியில் அவர் தோற்றது தனக்கு சங்கடத்தை தந்தது என்றும் கூறினார்.
விஜய் முதல்வராக கூடாது என்றும் இரண்டு பெரிய கட்சிகள் இணைந்து புதிய ஆட்சி உருவாக்க வேண்டும் என்றும் தன்னை பற்றிய வந்த தகவல்கள் அனைத்தும் வதந்தி என்றும் அந்த அளவுக்கு தரம் கெட்டவன் இல்லை இந்த ரஜினிகாந்த் என்றும் பதில் தந்தார்.
தேர்தலில் விஜய் வெற்றி பெற்றதும் தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்துகளை தெரிவித்தேன் என்றும் நான் அரசியலில் இல்லை. பிறகு ஏன் விஜய் மீது எனக்கு பொறாமை என்றும் ரஜினி விளக்கம் அளித்தார். மேலும் விஜயை முதல்வர் என்பதற்காக சம்பிராதயமாக நேரில் சென்று பார்ப்பது எனக்கு பிடிக்காது என்றும் வெளிப்படையாக ரஜினி கூறினார்.
இதற்கிடையே விஜய் முதல்வர் ஆனது எனக்கு ஆச்சரியம் கலந்த சந்தோஷம்தான். ஒருவேளை கமல்ஹாசன் முதல்வராகி இருந்தால் பொறாமை பட்டிருப்பேனோ என்னமோ, ஆனால் அப்போதும் பொறாமை வந்திருக்காது என்று தனது ஸ்டைலில் தாடையை தடவியபடி சிரித்தபடியே ரஜினிகாந்த் கூறியிருந்தார். இதுகுறித்து கமலும் விளக்கமளித்து எங்களுக்குள் போட்டி இருக்குமே தவிர பொறாமை சிறிதும் இருக்காது என்றும் கூறியிருந்தார்.
இதற்கிடையே நடிகர் கமல் முதல்வராகி இருந்தால் நான் பொறாமைபட்டிருப்பேன். விஜய் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டா என்கிற பாணியில் ரஜினி பேசிவிட்டார் என்று ஒரு தரப்பு ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். மேலும் நான் நேரில் வந்து சம்பிரதாயமாக பார்க்கும் அளவுக்கு கூட விஜய் மீது தனக்கு பெரிய அபிப்ராயம் இல்லை என்றும் ரஜினி மறைமுகமாக சொன்னதாகவும் இணையத்தில் ஒரு விமர்சனம் கிளம்பியுள்ளது.
ஆனால் உண்மையில், இது இரண்டுமே விஷமத்தனமாக தவறான கருத்தாக பரவுகிறது. கமலும் நானும் சமமான போட்டியாளர்களாக ஒரு காலத்தில் இருந்தவர்கள். அதனால் அரசியலில் கமல் முதல்வரானால் பொறாமை வந்திருக்குமோ என்று ரஜினி யதார்த்தமாக கூறினார். மேலும் முதல்வர் என்பதற்காக விஜயை சம்பிரதாயமாக சந்திக்காமல் ஏதாவது காரணத்துடன் சந்திக்க வேண்டும் என்றுதான் ரஜினி கூறினார் என்றும் ரஜினி ரசிகர்கள் அதற்கு பதிலடி தந்து வருகின்றனர்.





