நடிகர் டைப்பிஸ்ட் கோபு அந்த கால திரைப்படங்களில் நகைச்சுவைக் காட்சிகளில் வலம் வந்தவர். அதே கண்கள் காசே தான் கடவுளடா போன்ற படங்களை குறிப்பிட்டுச் சொல்லலாம். சிவாஜி கணேசன் ஜெய்சங்கர் முத்துராமன் இப்படி அந்த கால கதாநாயகன்களுடன் நூற்றுக்கும் மேலான படங்களில் நடித்த இவர் எம்.ஜி.ஆருடன் நடித்தது இல்லை
கடந்த 1978ம் ஆண்டில் டைப்பிஸ்ட் கோபுவின் அன்பு மகனுக்கு இருதயத்தில் ஏற்பட்ட பிரச்னையால் ஆபரேஷன் செய்ய வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. இவர் பெரிய ஹீரோ இல்லை. ஆபரேஷனுக்கு 15 ஆயிரம் ரூபாய் பணம் கட்ட வேண்டும். தனக்கு தெரிந்த தன்னுடன் நடித்த நடிகர்கள் வீட்டுக்கும் சென்று அவர்களிடம் உதவி கேட்டார்.
சாரி கோபு. நீ ஒண்ணும் கவலைப்படாதே கோபு. கடவுள் உன்னைக் கை விட மாட்டார் என்று ஆறுதலான வார்த்தைகளே கிடைத்தது. யாரிடமும் உதவி கிடைக்கவில்லை. இதில் சிவாஜி கணேசன் மட்டும், நீ எப்படியாவது பையன் ஆபரேஷனை முடிச்சுடு. நான் உனக்கு 2 படங்களுக்கு சிபாரிசு பண்றேன் என்று கூறியிருக்கிறார்.
தத்துவங்களும் ஆறுதல்களும் உபதேசங்களும் கிடைத்ததே தவிர உதவி டைப்பிஸ்ட் கோபுவுக்கு கிடைக்கவில்லை. அப்போது டாக்டர் ஹண்டே என்பவர், தோட்டத்துக்குப் போய் சின்னவரைப் பாரு என்று கூறியிருக்கிறார். சற்று குற்ற உணர்ச்சியுடன் தோட்டத்துக்குப் போன கோபு காத்திருந்து எம்ஜிஆரை பார்த்து விஷயத்தை சொல்கிறார்.
டைப்பிஸ்ட் கோபுவுக்கு எம்.ஜி.ஆர் தந்த ஒரே பதில். நான் பாத்துக்கறேன் என்ற சுருக்கமான பதில்தான். அடுத்த 2 நாட்களில் ஆபரேஷன். எம்ஜிஆர் தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை. எல்லா நம்பிக்கையும் இழந்து போய் மருத்துவமனைக்கு சென்ற கோபுவை டீன் டாக்டர் அழைக்கிறார்.
ஆபரேஷனுக்கான மொத்த பணத்தையும் எம்.ஜி.ஆர் கட்டிட்டார்.. மறுநாள் அறுவை சிகிச்சை 11 மணிக்கு என்கிறார். அப்போது கோபுவின் கையில் ஒரு பொட்டலத்தைக் கொடுத்த டாக்டர், சின்னவர் உன்னிடம் கொடுக்கச் சொன்னார் என்கிறார். அதில் 15 ஆயிரம் ரூபாய் பணம் இருந்துள்ளது.
இது இதர மருத்துவ செலவுகளுக்காக எம்ஜிஆர் தந்திருக்கிறார் என்றார். அதனால் தான் இன்றும் எம்ஜிஆரை வள்ளல் என்று மக்கள் புகழ்கின்றனர்.





