தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் நடிகர் விஷ்ணு விஷால். கடந்த 2002ம் ஆண்டு நடிகர் விஷ்ணு விஷால் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் கட்டாகுஸ்தி படம் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் கட்டாக்குஸ்தி 2 படம் கடந்த 3ம் தேதி வெளியாகி திரையரங்குகளில் பாசிட்டிவ் விமர்சனங்களுடன் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் மதுரைக்கு வந்த கட்டா குஸ்தி 2 படக்குழுவினர் அங்கு ரசிகர்களை சந்தித்து பேசினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய படத்தின் நாயகன் நடிகர் விஷ்ணு விஷால் கூறியதாவது, காலத்துக்கு ஏற்றவாறு தொழில்நுட்பம் மாறிக்கொண்டே இருக்கிறது. மாற்றம் என்பதே நிலையானது. அதற்கேற்றவாறு நாமும் மாறிக்கொள்ள வேண்டும்.
நான் சினிமாவுக்குள் வந்த சமயத்தில் பிலிம் ரோல் மூலமாக படங்கள் எடுத்தார்கள். அதன் பிறகு டிஜிட்டல் கேமராக்கள் வந்து விட்டன. திரைத்துறை டிஜிட்டல் மயமாக ஆரம்பித்த சமயத்தில் குறும்படங்கள் அதிக கவனம் பெற்றன. குறும்பட இயக்குனர்களின் முக்கியத்துவம் அதிகரித்தது.
அந்த மாற்றத்தை ஏற்றுக் கொண்டு நான் செய்த திரைப்படங்கள்தான் முண்டாசுப்பட்டி இன்று நேற்று நாளை படங்களாகும். நான் மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாமல் குறும்பட இயக்குனர்களுடன் பணி செய்யாமல் இருந்திருந்தால் அடுத்த கட்டத்திற்கு சென்றிருக்க மாட்டேன். எனவே தொழில்நுட்பம் மாறும். காலம் மாறும். மக்களின் ரசனையும் மாறும். அதற்கேற்றவாறு நாமும் மாற வேண்டும்.
அதன்படி இன்றைக்கு ரீல்ஸ் காலம். அதையும் நாம் ஏற்றுக்கொண்டு அதற்கு ஏற்றவாறு வாழ வேண்டும். ஆனால் ரீல்ஸ் மட்டுமே வாழ்க்கை கிடையாது என்று நடிகர் விஷ்ணு விஷால் அப்போது கூறினார். மேலும் ஜனநாயகன் படம் திரைக்கு வருவது குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த நடிகர் விஷ்ணு விஷால் கூறுகையில், நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம். விஜய் முதல்வராக பதவி ஏற்ற பிறகு அவரது ஜனநாயகன் திரைப்படம் வர இருக்கிறது. சில காரணங்களால் இத்தனை காலம் தாமதமாகி விட்டது. ஆனால் அந்த படம் திரைக்கு வரும் போது நிச்சயமாக சினிமாவுக்கு அது ஒரு கொண்டாட்டமாக இருக்கும். நானும் முதல் நாள் முதல் காட்சியை கண்டிப்பாக சென்று பார்ப்பேன் என்று நடிகர் விஷ்ணு விஷால் கூறியிருக்கிறார்.





