இயக்குநர் அமீர் இயக்கத்தில், சூர்யா நடித்த படம் மௌனம் பேசியதே. இந்த படத்தில்தான் சூர்யாவை ஒரு நடிகராக அடையாளம் காண முடியும். காரணம், அவருக்கு கேமரா முன் நிற்கவும், நடிக்கவும் கற்றுத் தந்தவர் அமீர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதுவரை எதுவுமே தெரியாத அவரை, ஒரு நடிகனாக்கி காட்டியது மௌனம் பேசியதே படம்தான்.
இதையடுத்து, அமெரிக்காவில் படித்து திரும்பிய கார்த்திக்கு, பருத்தி வீரன் கதாநாயகன் என்ற முத்திரை பதித்த அடையாளத்தை கொடுத்தவரும் இயக்குநர் அமீர்தான். சிவக்குமாரின் சொந்தக்காரர் என்ற முறையில் இந்த படத்துக்கு தயாரிப்பாளராக வந்தவர்தான் ஞானவேல் ராஜா. ஆனால், படப்பிடிப்பு துவங்கிய ஒரு மாதத்துக்குள், கையில் பணமில்லை என எஸ்கேப் ஆகிவிட்டார்.
அதற்கு பின் தன் நண்பர்கள், உறவினர்கள் என தெரிந்தவர்களிடம் எல்லாம் 50 ஆயிரம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை கடனாக பெற்று, இந்த படத்தை கஷ்டப்பட்டு, வெற்றிக்கரமாக எடுத்து முடித்தவர் இயக்குநர் அமீர். இப்படி பல பேரிடம் சென்று அந்த பணத்தை வாங்கி வந்து அமீரிடம் ஒப்படைத்தவர் அந்த படத்தில் பணிபுரிந்த இயக்குநர் சமுத்திரக்கனி.
அதே போல் இந்த படத்தின் கடைசிக்கட்ட படப்பிடிப்புக்கான முழு தொகையையும் அமீருக்கு கடனாக வழங்கியவர் இயக்குநர், நடிகர் சசிக்குமார். இவையவைத்தும் அவர்களே வெளிப்படையாக ஒத்துக்கொண்ட, அவர்கள் பதிவு செய்துள்ள உண்மைகள். இதில் அவர்கள் பொய் சொல்ல வேண்டிய அவசியம் எதுவுமில்லை.
அதுமட்டுமின்றி இந்த விவகாரத்தில் மௌனம் பேசியதே தயாரிப்பாளர் கணேஷ் ரகுவில் துவங்கி சசிக்குமார், சமுத்திரக்கனி, இயக்குநர், நடிகர் பொன்வண்ணன், இப்போது கவிஞர் சிநேகன் வரை அமீருக்கு ஆதரவாக கரம் நீட்டியுள்ளனர். இதில் கவிஞர் சிநேகன், அமீரின் நேர்மையை எடைபோட்டு பார்க்கும் தகுதி எவருக்கும் இல்லை. அவர் இந்த படத்தை முடிக்க எவ்வளவு கஷ்டப்பட்டார் என்று எனக்குத் தெரியும். ஒருவரை விமர்சிப்பதற்கும் அறம் தெரிந்திருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
இப்படி அமீருக்கு தொடர்ந்து ஆதரவு பெருகி வரும் நிலையில், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசிய தவறான வார்த்தைகள் குறித்து சிவக்குமார் குடும்பம் சார்ந்த சூர்யா, கார்த்தி, ஏன் நடிகர் சிவக்குமாரே கூட பேசியிருக்க வேண்டும். ஆனால், ஞானவேல் ராஜா சொந்தக்காரர் என்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கின்றனர். இதை தனக்கு சாதகமாக்கிக்கொண்டு, அமீரை அவதூறாக பேசி, சிவக்குமார் குடும்பத்தை டேமேஜ் செய்து வருகிறார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.





