தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் விஜய். இப்போது தனது 69வது படத்தில் நடித்து வருகிறார். வருகிற ஜனவரி 25ம் தேதியுடன் அவர் நடிக்க வேண்டிய காட்சிகள் முடிவடைகிறது. அதன்பிறகு நடிகர் விஜய் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களை நேரடியாக சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு மக்கள் மத்தியில் அமோகமான வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், வரும் 2026ம் ஆண்டில் சட்டசபை தேர்தலில் மக்களின் அமோக ஆதரவைப் பெற்று தமிழகத்தில் ஆட்சியமைக்கும் திட்டத்தில் நடிகர் விஜய் அரசியல் களத்தில் தீவிரம் காட்டி வருகிறார்.
இதற்கிடையே சில தினங்களுக்கு முன் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தங்களது கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து நடிகர் விஜய் வெளியிட்டுள்ள கடிதம் ஒன்றில் கூறியிருப்பதாவது, அன்பு தங்கைகளே கல்வி வளாக முதற்கொண்டு ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் தாய்மார்கள் எனதருமை தங்கைகள் குழந்தைகள் என அனைத்து தரப்பு பெண்களுக்கும் எதிராக நடக்கும் சமூக அவலங்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு அவலங்கள், பாலியல் குற்றங்கள் நடக்கின்றன.
பல்வேறு வன்முறை கொடுமைகளை கண்டு உங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கும் சொல்ல முடியாத வேதனைக்கும் ஆளாகிறேன். யாரிடம் உங்கள் பாதுகாப்பை கேட்பது, நம்மை ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும் எந்த பயனும் இல்லை என்பது தெரிந்ததே. அதற்காகவே இந்த கடிதம். எல்லா சூழல்களிலும் நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன். அண்ணனாகவும் அரணாகவும் இருப்பேன்
எனவே எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான தமிழ்நாட்டைப் படைத்தே தீருவோம். அதற்கான உத்தரவாதத்தை நாம் இணைந்து விரைவில் சாத்தியப்படுத்துவோம் என்று அந்த கடிதத்தில் நடிகர் விஜய் கூறியிருக்கிறார். இந்த கடிதம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





