தமிழ் சினிமாவில் 33 ஆண்டுகள் நடிகராக இருந்து தற்போது தமிழக முதல்வராக விஜய் இருந்து வருகிறார். இந்நிலையில் அவரது மகன் ஜேசன் சஞ்சய் சிக்மா என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். இது அவரது முதல் படம். லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்துள்ளார்.
திரைப்பட இயக்கம் குறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் ஜேசன் சஞ்சய் கூறியதாவது, சினிமா குடும்பப் பின்னணியில் வளர்ந்ததால் எனக்குள் சின்ன வயதில் இருந்தே சினிமா இருந்தது. நிறைய உலகப் படங்களை பார்ப்பேன். அந்த படங்களின் கதையை நண்பர்களுக்கு சொல்லுவேன்.
அப்படித்தான் எனக்குள் ஒரு கதை சொல்லி உருவானான். இதுதான் என்னுடைய சினிமா பயணத்தின் முதல் புள்ளி. அப்புறம் கனடாவில் சினிமா மேக்கிங் கோர்ஸ் படித்து முடித்தேன். படிக்கிற போது ஒரு கதையும் எழுதினேன். அதை ஒரு குறும்படமாக இயக்கினேன். இந்தியாவுக்கு திரும்பி வந்ததும் இரண்டு மூன்று கதைகள் தயார் செய்தேன்.
அதை நண்பர்களோடு கலந்து பேசி ஒரு கதையை இயக்க முடிவு செய்தேன். எனது சித்தப்பா சஞ்சீவ் தான் தயாரிப்பாளர் தமிழ் குமரனை அறிமுகப்படுத்தினார். அவரிடம் கதை சொன்னேன் அவருக்கு பிடித்திருந்தது. பின்னர் சுபாஸ்கரன் சாரிடம் கதை சொன்னேன். அவருக்கும் கதை பிடித்திருந்தது.
அதுதான் இப்போது சிக்மா திரைப்படமாக மாறி இருக்கிறது. நீர் நிலம் காற்று பணம் இதன் மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. ஆனால் உறவுகளோட மதிப்பு குறைந்து கொண்டே இருக்கிறது. இது ஏன் என்று கேட்பதுதான் சிக்மா படம். மத்தவங்க உங்களை நம்புகிறார்களோ இல்லையோ உங்களை முதலில் நீங்கள் நம்புங்கள் என்பதுதான் படம் சொல்லும் மெசேஜ்.
படத்தில் ஆக்சன் காட்சிகள் நிறைய இருக்கும். ஆனாலும் சென்டிமென்ட் காமெடியும் படத்தில் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். எப்போது நடிப்பீர்கள் என்று என்னிடம் கேட்கிறார்கள். பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் என்னை நடிக்க அழைத்த போது எனக்கு வயது 20. பக்குவம் இல்லாததால் மறுத்துவிட்டேன். சிக்மா படம் வெளிவந்த பிறகுதான் தொடர்ந்து படம் இயக்குவதா நடிப்பதா என்பதை நான் முடிவு செய்ய வேண்டும் என்று இயக்குனர் ஜேசன் சஞ்சய் கூறியிருக்கிறார்.





