இந்திய சினிமாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஒவ்வொரு மொழிகளிலும் மிகச் சிறந்த கலைஞர்கள் இருக்கின்றனர். உதாரணமாக தமிழில் ரஜினி, கமல், விஜய், அஜீத், விக்ரம் போன்றவர்கள் இருக்கின்றனர். தெலுங்கில் சிரஞ்சீவி, நாகர்ஜூனா, அல்லு அர்ஜூன், மகேஷ்பாபு, வெங்கடேஷ் போன்றவர்கள், கன்னடத்தில் சிவராஜ்குமார் போன்றவர்கள், இந்தியில் அமிதாப் பச்சன், அக்ஷய்குமார், அஜய் தேவ்கன், ஷாருக்கான், சல்மான்கான் போன்றவர்கள் இருக்கின்றனர்.
இப்படி முக்கிய நடிகர்களாக, முன்னணி நடிகர்களாக அவர்கள் இருந்தாலும் சினிமாவில் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்த நடிகர்கள் என்றால் அப்படி யாருமே இதுவரை இல்லை என்று சொல்லலாம். மிகப்பெரிய வெற்றிப் படங்களை தந்த நடிகர்கள் கூட அடுத்தடுத்த படங்களில் பிளாப் படங்களை தரலாம். இது ரஜினி, கமல், அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, அல்லு அர்ஜூன் என சகலமானவர்களுக்கும் பொருந்தும்.
இந்தியில் மிக முக்கிய முன்னணி நடிகராக இருந்து வருபவர் அக்ஷய் குமார். இவர் ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் 2ம் பாகமாக வெளிவந்த 2.0 படத்தில் வில்லனாக நடித்திருந்தார். பட்சி ராஜா என்ற புரபசர் கேரக்டரில் பறவைகள் இனம் அழிய காரணமாக இருக்கும் செல்போன்களை பயன்படுத்தாதீர்கள் என்று போராடும் ஒரு முதியவராக நடித்திருந்தார்.
இந்த படத்தில் அக்ஷய்குமார் நடிப்பு பலரையும் வெகுவாக கவர்ந்தது. ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் ஒரு நடிகர், எப்பேர்ப்பட்டவராக இருக்க வேண்டும் என்பதை தேர்வு செய்து, அக்ஷய்குமாரை அந்த கேரக்டரில் இயக்குனர் ஷங்கர் நடிக்க வைத்திருந்தார். ஆனால் சமீபகாலமாக இந்தியில் தோல்வி நாயகனாக வலம் வருகிறார் நடிகர் அக்சய் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அக்சய் குமார் நடிப்பில் இந்தியில் வெளியான நான்கைந்து படங்கள் தொடர்ந்து தோல்வியை பெற்றன. கடைசியாக வெளிவந்த அவரது சர்பிரா படமும் ஓடவில்லை. இதனால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. இந்த சூழலில் அவரது நடிப்பில் அடுத்து கேல் கேல் மெய்ன் என்ற படம் ரிலீஸாக உள்ளது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.
இதில் பேசிய நடிகர் அக்சய் குமார், எது நடந்தாலும் அது நன்மைக்கே. என்னுடைய நான்கைந்து படங்கள் சரியாக வரவில்லை. அதற்காக எனக்கு மன்னிக்கவும் நண்பரே, கவலைப்பட வேண்டாம் என்றெல்லாம் மெசேஜ்கள் வருகின்றன. நான் சாகவில்லை. இந்த மேசேஜ்களை பார்க்கும்போது எனக்கு இரங்கல் செய்தி போல உள்ளன. நான் சொந்தமாக சம்பாதிக்கிறேன், யாரிடமும் எதையும் பறிக்க மாட்டேன் என்று கோபமாக பேசியிருக்கிறார். அதே நேரத்தில் வெற்றிப் படங்களை தந்த போது ரூ. 150 கோடி சம்பளம் வாங்கிய அக்சய் குமார், இப்போது ஒரு படத்தில் நடிக்க ரூ. 30 கோடி வாங்குகிறார். இதை பார்த்தாவது, தமிழ் சினிமா நடிகர்கள் சம்பள விஷயத்தில் அக்சய் குமாரிடம் பாடம் கற்க வேண்டும்.





