நடிகர் அர்ஜூன், தமிழ் சினிமாவில் சீனியர் நடிகர்களில் ஒருவராக இருப்பவர். இவர் கடந்த 1980, 90களில், தமிழ் சினிமாவில் முக்கிய முன்னணி ஹீரோவாக வலம் வந்தவர். தேசப்பற்று மிக்க இவரது படங்கள், ரசிகர்களை மிகவும் கவர்ந்திருக்கின்றன. குறிப்பாக சங்கர் குரு, ஜெண்டில்மேன், ஜெய்ஹிந்த், முதல்வன் உள்ளிட்ட பல படங்கள் அர்ஜூனுக்கு பெரிய ஹிட் படங்களாக இருந்தன.
சமீபத்தில் நடிகர் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதிக்கும் திருமணம் நடந்தது. ரஜினிகாந்த், பிரபுதேவா, ஷங்கர், சசிக்குமார், விஜய் சேதுபதி, பிரசன்னா, சினேகா, சத்யராஜ் என பிரபல திரை நட்சத்திரங்கள் திரண்டு வந்து மணமக்களை வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
சமீபகாலமாக அர்ஜூன் கதாநாயகனாக நடிக்காமல் வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்கிறார். குறிப்பாக அவர் விஜய் நடித்த லியோ படத்தில் வில்லனாக நடித்திருந்த நிலையில், இப்போது அஜீத்குமார் நடித்து வரும் விடாமுயற்சி படத்திலும் வில்லனாக நடித்திருக்கிறார். அவருடன் ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
நடிகர் அர்ஜூன் துவக்கத்தில் இருந்தே தேசப்பற்று மிக்க படங்களில் நடித்து பெயர் வாங்கியவர். அவரது பிறந்த நாள் இந்திய நாட்டின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 என்பது குறிப்பிடத்தக்கது. 1963ம் ஆண்டில் பிறந்த அவருக்கு 61 வயதாகும் அவர் இப்போது உடலை நல்ல ஆரோக்கியத்துடன் கட்டுப்பாடுடன் சுறுசுறுப்பாக படங்களில் நடித்து வருகிறார்.
நடிகர் அர்ஜூன் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்துவரும் நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 4 மாதங்களாக நடக்கவில்லை. படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரடக்சன்ஸ் நிதி நெருக்கடியில் இருப்பதால் படம் பாதியில் நின்றுள்ளதாக தெரிய வருகிறது. எனினும் இப்போது மீண்டும் ஷூட்டிங் துவங்கப்பட அதிக வாய்ப்பு உருவாகி உள்ளது.
இதுகுறித்து நடிகர் அர்ஜூன் கூறுகையில், விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் மீண்டும் துவங்க உள்ளது. இன்னும் 20 முதல் 30 சதவீத படப்பிடிப்பு மீதம் உள்ளது. இந்த ஷெட்யூலில் படப்பிடிப்பு நிறைவடையும் என்று கூறியிருக்கிறார். அஜீத்குமார் 40 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்துள்ள நிலையில், 30 சதவீத படப்பிடிப்பை இயற்கை சீற்றங்கள் நிறைந்த அஜர்பைஜானில் முடிப்பது சாத்தியமா, தீபாவளிக்கு திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா என்பதில் ரசசிகர்களுக்கு குழப்பம் நீடிக்கிறது.





