கடந்த 1990களில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் மாதவன். மேகி என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர். முதலில் சில டிவி சீரியல்களில் நடித்த அவர் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் அலைபாயுதே படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் பெரிய அளவில் கவனம் பெற்றார்.
தொடர்ந்து தமிழ் இந்தி என ஏராளமான படங்களில் நடிகர் மாதவன் நடித்தார். தமிழில் கன்னத்தில் முத்தமிட்டால் ரன் ஆயுத எழுத்து ஜே ஜே விக்ரம் வேதா அன்பே சிவம் மன்மதன் அம்பு போன்ற பல வெற்றிப் படங்களில் மாதவன் நடித்திருக்கிறார்.
நடிகர் மாதவன் நடிக்க வந்த ஆரம்பத்தில் இளம்பெண்கள் மத்தியில் சாக்லேட் பாய் என வர்ணிக்கப்பட்டவர். இந்தியில் ராக்கெட்டரி நம்பி என்ற படத்தை அவரே டைரக்ட் செய்தார். இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்துக்கு விருதும் கிடைத்தது.
இப்போது கோவையை சேர்ந்த விஞ்ஞானி ஜிடி நாயுடு பயோபிக் கதையில் ஜிடி நாயுடுவாக நடிகர் மாதவன் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் சத்யராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இப்போது நடிகர் மாதவன் 50 வயதுகளை கடந்த நிலையில் வெண்மையான முடி தலை, நரைத்த தாடி மீசையுடன் வயதான ஒரு தோற்றத்தில் முதியவர் போல மாதவன் காணப்படுகிறார்.
இதுகுறித்து சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் மாதவன் கூறியதாவது, சூட்டிங் ஸ்பாட்டில் நான் நடிக்கும் போது கதாபாத்திரத்திற்காக மற்றும் தேவையான நேரங்களில் மட்டும் தலை முடிக்கு டை அடிக்கிறேன். மற்ற நேரங்களில் தலைமுடிக்கு டை அடிப்பதில்லை. உண்மையான வயதை இயல்பாக காட்டுவதில் எந்த தவறும் இல்லை.
இதை நான் ரஜினி, அஜீத்குமார் ஆகியோரிடம் இருந்து கற்றுக் கொண்டேன் என்று நடிகர் மாதவன் அந்த நிகழ்ச்சியில் வெளிப்படையாக கூறியிருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் ஷூட்டிங் தவிர மற்ற நேரங்களில் தனது இயல்பான தோற்றத்தில் காணப்படுகிறார். அதே போல் நடிகர் அஜீத்குமார் தனது படங்களில் கூட தலைக்கு டை அடிக்காமல் வெள்ளை நிற முடியுடன் நடிப்பது குறிப்பிடத்தக்கது.





