தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் தயாரிப்பாளர் கவிஞர் என பன்முகத் தன்மையோடு வலம் வருபவர் ஆர் பார்த்திபன். இரவின் நிழல் ஒத்த செருப்பு போன்ற வித்யாசமான படங்களை தமிழ் சினிமாவுக்கு தந்தவர். இயக்குனர் கே பாக்யராஜின் சீடர் என்ற பெருமைக்குரியவர். ஒரு சிறந்த மனிதராக அடையாளம் காணப்பட்டவர்.
ஆந்திரா துணை முதல்வர் தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் நடித்த உஸ்தாத் பகத்சிங் படம் கடந்த 19ம் தேதி ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் நல்லா நாகப்பா என்ற கேரக்டரில் நடிகர் பார்த்திபன் வில்லனாக நடித்திருக்கிறார். இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு ஐதராபாத்தில் உஸ்தாத் பகத்சிங் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி நடந்தது.
அந்த விழாவில் நடிகர் பார்த்திபன் கலந்துக்கொண்டு பேசினார். அப்போது நான் ஒரு நாயுடு பையன். சென்னையில் பிறந்து வளர்ந்ததால் எனக்கு தெலுங்கு அவ்வளவாக வராது என்றும் பேசி இருந்தார். சினிமாவில் புரட்சி பேசும் நிலையில், தனது சாதி குறித்து நடிகர் பார்த்திபன் இந்நிகழ்ச்சியில் பெருமையாக பேசியது கடும் விமர்சனத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
அதன் பிறகு ஜாதி குறித்து பேசியதற்காக நடிகர் பார்த்திபன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். மேலும் ஜாதியை தலைக்கு மேல் வைத்து கொண்டாடுபவர்களை எனக்கே பிடிக்காது. இவன் உட்பட பல படங்களில் நானே அதை வன்மையாக கண்டித்து இருக்கிறேன். அப்படி இருக்கும்போது நானே அதைச் செய்வேனா? ஏதோ தவறு நடந்து விட்டது என்பதை உணர்ந்து வருந்திக் கிடக்கிறேன்.
இவ்வளவு பேர் வருத்தத்திற்கு நான் ஆளாக்கி இருப்பது எனக்கே பிடிக்கவில்லை. என் திறமையை மட்டும் நம்புவேனே தவிர ஜாதியை சொல்லி வயிறு வளர்க்க நான் விரும்புபவனும் அல்ல. இனி ஒரு முறை தவறியும் கூட இது நடக்காது என்று பார்த்திபன் ஒரு பதிவை வெளியிட்டு தன் ரசிகர்களிடம் வருத்தமும் ஆதங்கமும் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் ஜாதி மதம் அற்றவன் என்பதற்கான சான்றிதழை பெற தற்போது முயற்சித்து வருவதாக பார்த்திபன் கூறியிருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், ஜாதி இல்லை மதம் இல்லை என்று மனதளவில் உறுதியாக இருப்பவன் நான். இருந்தாலும் இடையில் அதற்கு ஒரு சோதனை ஏற்பட்டதால் நோ கேசட் நோ ரீலிஜியன் என்ற அரசின் சான்றிதழை பெறுவதற்கு பெரும் முயற்சி எடுத்து வருகிறேன். விரைவில் எனக்கு அந்த சான்றிதழ் கிடைக்கும் என்று பார்த்திபன் அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.





