நடிகர் ரகுவரன், 49 வயதில் மறைந்து போன மிக அற்புதமான திரைக்கலைஞன். பொக்கிஷமாக தமிழ் சினிமாவுக்கு கிடைத்த நடிகர்களில் ரகுவரனும் ஒருவர். எந்த மாதிரியான கேரக்டர் என்றாலும், அதை அனாசயமாக போகிற போக்கில் செய்துவிட்டு போகிற மிக யதார்த்தமான நடிகர். அவருக்கு நடிப்பு பல படங்கள் தீனி போட்டன. சில இயக்குனர்கள் மட்டுமே அவரை நன்றாக பயன்படுத்திக் கொண்டனர்.
நடிகர் கமல்ஹாசன், தனது படங்களில் பெரும்பாலும் நாசரை வில்லனாக நடிக்க வைத்திருந்தார். அதே போல், நடிகர் ரகுவரன்தான், ரஜினி நடித்த பல படங்களுக்கு வில்லனாக நடித்திருப்பார். பாட்ஷா படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு, ரகுவரனின் அழுத்தமான நடிப்பும் மிக முக்கிய காரணம் என, ரஜினியே மேடை ஒன்றில் பேசும்போது குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார்.
மனிதன், ராஜா சின்ன ரோஜா, ஊர்க்காவலன், பாட்ஷா, அருணாசலம் என ரஜினியின் பல படங்களில் தொடர்ந்து ரகுவரன் வில்லனாக நடித்ததால், கமல் படங்களில் ரகுவரன் வில்லனாக நடிக்கவில்லை என்று சொல்லப்பட்டாலும், நடிப்பில் கமலையே மிஞ்சிவிடும் அளவுக்கு திறமை மிக்கவர் ரகுவரன். அதனால்தான் தன் படங்களில் ரகுவரன் நடிக்காமல் கமல் பார்த்துக் கொண்டார் என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.
எனினும் ரகுவரன் ஒரு கட்டத்துக்கு பிறகு வில்லனாக நடிப்பதை தவிர்த்துவிட்டு அண்ணா, அப்பா, டாக்டர் போன்ற கேரக்டர்களிலும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சிவாஜி படத்தில் ரஜினியின் நண்பராக டாக்டர் கேரக்டரில் நடித்திருந்தார். அதே போல் யாரடி நீ மோகினி படத்தில் தனுஷ்க்கு அப்பாவாகவும், முகவரி படத்தில் அஜீத்குமாருக்கு அண்ணனாகவும் நடித்திருந்தார். திருமலை படத்தில் விஜய்க்கு நண்பராகவும் நடித்திருப்பார். மருதமலை படத்தில் கலெக்டராக ரகுவரன் சிறப்பாக நடித்திருந்தார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் மற்றும் இயக்குனர் ஏ வெங்கடேஷ், ரகுவரன் குறித்த பல விஷயங்களை பேசியிருந்தார். அவர் கூறியதாவது, நடிகர் விஜயை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவருக்கு சினிமா துறை சார்ந்தவர்களும் ரசிகர்களாக இருக்கின்றனர். ஆனால் விஜய்க்கு மிகவும் பிடித்த நடிகர் ரகுவரன்தான். ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் அவர் நடிக்க வேண்டிய காட்சிகளை முடித்து விட்டாலும், வீட்டுக்கு கிளம்பாமல் ரகுவரன் நடிப்பதை இருந்து பார்த்துவிட்டுச் செல்வார்.
அதே போல், விஜய் எவ்வளவு பெரிய டயலாக் இருந்தாலும் அதை உடனே ஷூட்டிங் ஸ்பாட்டில் பெர்பாமென்ஸ் செய்து அசத்தி விடுவார். அதை ரகுவரன் ரொம்பவும் ரசிப்பார். இந்த பையன் கிட்ட ஏதோ ஒண்ணு இருக்கு. கண்டிப்பா பெரிய ஹீரோவாக வருவார் அப்படின்னு அப்பவே ரகுவரன் சார் கணிச்சார், என்கிட்டேயும் அதை சொல்லியிருக்கிறார், என்று இயக்குனர் ஏ வெங்கடேஷ் கூறியிருக்கிறார்.





