சட்டசபை தேர்தல் முடிவுக்கு பிறகு கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்த திமுக தலைவர் ஸ்டாலினை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார். அப்போது அதிமுக திமுக கூட்டணி கட்சிகள் இணைந்து புதிய ஆட்சி அமைக்க அவர் கூறியதாக ஒரு தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் விஜய்க்கு ரஜினி வாழ்த்து சொல்லவில்லை என்றும் ஒரு விமர்சனம் எழுந்தது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது, நான் அரசியலில் இல்லை. பிறகு எதற்கு விஜய் மீது நான் பொறாமைப்பட வேண்டும். இரண்டு பெரிய கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க நான் கூறியதாக ஒரு வதந்தி பரவியது. அப்படி தரம் கெட்டு நடப்பவன் நான் இல்லை.
சினிமா புகழின் மூலம் விஜய்க்கு பெரிய வெற்றி கிடைத்துள்ளது. அவருக்கு மக்கள் மத்தியில் இருந்த சினிமா செல்வாக்கும் சமூக வலைதளங்கள் மூலம் அவருக்கு கிடைத்த வரவேற்பும் அவருக்கு பெரிய பலமாக அமைந்தன. இப்போது விஜய் மீது பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.
அதனை அவர் பூர்த்தி செய்வார் என்று நம்புகிறேன். மக்களை சந்தித்து நல்லது செய்வார் என்று நம்புகிறேன். அவரை இரண்டு ஆண்டுகளுக்கு எந்த தொந்தரவும் செய்யக்கூடாது. அவருக்கு போதிய கால அவகாசம் கொடுக்க வேண்டும். இனிமேல் அவர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தொண்டர்கள் ரசிகர்கள் என யார் தப்பு செய்தாலும் நேரடியாக விஜயை தான் அது பாதிக்கும்.
நான் ஏன் அரசியலுக்கு வரவில்லை என சுமார் மூன்று பக்கத்திற்கு ஏற்கனவே விளக்கம் கொடுத்துள்ளேன். நான் அரசியலுக்கு வந்திருந்தால் நிச்சயம் 100 சதவீதம் வெற்றி பெற்று இருப்பேன். சினிமா துறையில் இருந்து பலரும் போய் முதல்வர் விஜய்யை பார்த்துவிட்டு வந்துள்ளனர். அப்படி சம்பிரதாயமாக பார்த்துவிட்டு வருவது எனக்கு பிடிக்காது.
கடந்த 60 ஆண்டுகள் இரண்டு கட்சிகளை பார்த்துவிட்டு மாற்றம் தேவை என இளைஞர்கள் பெண்கள் முடிவு செய்து விஜயை தேர்ந்தெடுத்துள்ளனர். இளைஞர்கள் பெண்கள் மட்டுமல்ல, சமூக வலைத்தளமும் முக்கிய பங்கு வகித்திருக்கிறது. முதல்வர் விஜய்க்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.





