நடிகர் அஜீத்குமார் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு மே 10ம் தேதி, ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் துவங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு நாள் முன்னதாக கடந்த 9ம் தேதியே துவங்கி விட்டனர். ஆனால், 10ம் தேதி மாலையுடன் பேக்கப் சொல்லி விட்டு ஹீரோ, டைரக்டர் உள்ளிட்ட படக்குழுவினர் 2 நாட்களில் சென்னை திரும்பி விட்டனர்.
இரண்டே இரண்டு நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தியது ஏன் என்ற கேள்விக்கு. ஆந்திராவில் தேர்தல் பிரசாரம் பரபரப்பாக நடந்து வருவதால் அங்கு ஷூட்டிங் நடத்துவதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகவும், தேர்தல் ஓட்டுப்பதிவு முடிந்த பின்பு, மீண்டும் ஐதராபாத்தில் குட் பேட் அக்லி ஷூட்டிங் நடக்கும் என்றும் கூறப்பட்டது.
இரண்டே நாட்கள் மட்டும் இப்படி அவசரமாக அஜீத்குமாரின் ஷூட்டிங் நடத்த வேண்டிய அவசியம் என்ன, தேர்தல் முடிந்த பிறகு ஐதராபாத்தில் ஷூட்டிங்கை துவங்கியிருக்கலாமே என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துளளது. ஏனெனில் ஏற்கனவே எடுக்கப்பட்ட விடாமுயற்சி படம், 7 மாதங்கள் கடந்தும் இன்னும் பாதி படப்பிடிப்புடன் அந்தரத்தில் தொங்குகிறது.
இப்படி திடீரென ஆதிக் ரவிச்சந்திரன் ஷூட்டிங் துவங்க காரணம் என்ன என்ற உண்மை இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஐதராபாத்தில் நடந்த இந்த 2 நாள் படப்பிடிப்பிலும் அஜீத்குமார் நடித்த சண்டை காட்சிகள் மட்டுமே படம்பிடிக்கப்பட்டுள்ளன. மற்றபடி வேறு எந்த காட்சிகளும் ஷூட் செய்யப்படவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
அதாவது குட்பேட் அக்லி படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் என்ற மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. ஏற்கனவே, விடாமுயற்சி படத்தை தயாரித்த லைகா நிறுவனம், போதிய நிதியாதாரம் இல்லாததால், அந்த படத்தை அப்படியே கிடப்பில் போட்டு விட்டது. இதுவரை அந்த படத்துக்காக அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த அறிகுறியே இல்லை.
கடந்த 30, 40 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், குறிப்பிட்ட தேதியில் படத்தை துவங்கா விட்டால், அந்த படத்தை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனம் அப்படியே அந்த படத்தை கண்டுகொள்ளாமல் விட்டுவிடும். அடுத்த படம் தயாரிக்க போய்விடும். அதுபோன்ற சிக்கலை தவிர்க்க சில பாடல் காட்சிகள், சண்டை காட்சிகளை இயக்குனர்கள் முன்பே எடுத்துவிடுவது வழக்கம். அதே பழைய பார்மூலாவில், குட் பேட் அக்லி படத்தின் சண்டை காட்சியை ஆதிக் ரவிச்சந்திரன் 2 நாட்களில் எடுத்திருப்பதாக தெரிய வந்துள்ளது.





