தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் விஜய் ஆண்டனி. இப்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். திமிரு புடிச்சவன் பிச்சைக்காரன் நான் சலீம் இந்தியா பாகிஸ்தான் என அவர் நடித்த பல படங்கள் நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றிருக்கின்றன.
நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் வருகிற 27ம் தேதி வெளியாக உள்ள படம் மார்கன். இந்த படம் விஜய் ஆண்டனியின் 12 வது படமாகும். விஜய் ஆண்டனியின் தயாரிப்பு மற்றும் இசையமைப்பில் உருவான மார்கன் படத்தை லியோ ஜான்பால் டைரக்ட் செய்து இருக்கிறார். இந்த படத்தில் பிரிகடா சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
மார்கன் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வருகிற வெள்ளிக்கிழமை 27ம் தேதி மார்கன் படம் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து வருகிறது. நேற்று மதுரையில் நடந்த பிரமோ நிகழ்ச்சியில் நடிகர் விஜய் ஆண்டனி உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்று ரசிகர்களை சந்தித்து பேசினார்.
அந்த நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த படத்தின் நாயகன் விஜய் ஆண்டனி கூறியதாவது, இயக்குனருடன் ஏற்பட்ட நட்பின் அடிப்படையில் மார்கன் படத்தை நானே தயாரித்து உள்ளேன். திரை உலகில் போதைப்பொருள் பயன்பாடு நீண்ட நாட்களாகவே உள்ளது. சிகரெட் பிடிப்பதும் போதைப் பழக்கம் தான். அதன் அடுத்த கட்டம் தான் போதைப்பொருள் பழக்கம்.
போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை நடந்து வருகிறது. அதைப்பற்றி நான் சொல்ல ஒன்றும் இல்லை. நான் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. நடிகர்கள் நாட்டை ஆளக்கூடாது என்று விதி அல்ல. எம்ஜிஆர் ஜெயலலிதா கருணாநிதி என பலர் நாட்டை ஆணடுள்ளனர்.
மக்கள் ஆதரவு இருந்தால் யாராக இருந்தாலும் நாட்டை ஆளலாம். சக்தி திருமகன் திரைப்படத்திற்கு பின்பு அனைத்து நடிகர்களின் படங்களுக்கும் நான் இசையமைக்க திட்டமிட்டுள்ளேன். எத்தனை ஏஐ தொழில் நுட்பம் வந்தாலும் இதயத்தை தொடும் நல்ல பாடல்களை உருவாக்க முடியாது என்று நடிகர் விஜய் ஆண்டனி கூறியிருக்கிறார். விஜய் ஆண்டனி படங்களுக்கு இசையமைப்பது மட்டுமின்றி அடிக்கடி இசை கச்சேரிகளையும் வெளிநாடுகளில் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





