நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். ரெட்ரோ படத்தை தொடர்ந்து இப்போது கருப்பு என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தை நடிகர் ஆர்ஜே பாலாஜி டைரக்ட் செய்திருக்கிறார். தீபாவளிக்கு இந்த படம் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் அய்யனார் சாமி, வக்கீல் என 2 வேடங்களில் சூர்யா நடித்திருக்கிறார்.
நடிகர் சூர்யாவுக்கு கடந்த பல ஆண்டுகளாக பெரிய வெற்றிப் படங்கள் தமிழ் சினிமாவில் இல்லை. கடைசியாக அவரது நடிப்பில் வெளியான ரெட்ரோ படமும் வசூல் ரீதியாக பெரிய வரவேற்பை பெற்றாலும் விமர்சன ரீதியாக அதுவும் ஒரு சுமாரான படமாகவே இருந்தது. ஆனால் கருப்பு படம் சிங்கம் அயன் காக்க காக்க கஜினி போல பெரிய அளவில் பேசப்படும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தெலுங்கில் பிரபல இளம் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் தேவரகொண்டா ரெட்டி. பல ஹிட் படங்களை தெலுங்கு சினிமாவில் தந்திருக்கிறார். தற்போது நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த கிங்டம் படம் வருகிற 31ம் தேதி, அதாவது நாளை ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
விஜய் தேவரகொண்டா ரெட்டிக்கும் நேஷனல் கிரஷ் நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கும் இடையே காதல் நீடிப்பதாகவும் விரைவில் திருமண அறிவிப்பு வெளியாகும் என்று தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கிங்டம் படத்தின் பிரமோ நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகர் சூர்யா குறித்து பேசியிருக்கிறார்.
அந்த பிரமோ நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தேவரகொண்டா ரெட்டி கூறியதாவது, கிங்டம் படத்தின் கதை ஆந்திரா சென்னை இலங்கை கடற்கரை பகுதிகளில் நடப்பது போல தான் இருக்கிறது. கதை கேட்கும் போதே இதை தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று சொன்னேன்.
கிங்டம் படத்தின் டீசரில் கொடுக்க நடிகர் சூர்யா சரியாக இருப்பார் என்று இயக்குனர் என்னிடம் கூறினார். நான் அதை நடிகர் சூர்யாவிடம் தயங்கி தயங்கி கேட்டேன். அண்ணா எனக்கு ஒரு உதவி… என தயங்கியபடி டீசருக்கு குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டேன். அதற்கு உடனே சூர்யா ஓகே சொல்லிவிட்டார். அதனால் அவருக்கு மிகப்பெரிய நன்றி என்று அந்த மேடையில் விஜய் தேவரகொண்டா கூறியிருக்கிறார்.





