தமிழ் சினிமாவில் துணை நடிகராக பல படங்களில் நடித்து பிறகு தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் நாயகனாக மாறியவர் நடிகர் விஜய் சேதுபதி. மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். இதுவரை 52 படங்களில் நடித்திருக்கிறார். இதில் அவரது 50வது படம் மகராாஜா, 52வது படம் தலைவன் தலைவி ஆகிய 2 படங்களும் அவருக்கு மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்தன.
நடிகர் விஜய் சேதுபதி சினிமாவில் ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி வில்லனாகவும் சில படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக ரஜினியுடன் பேட்ட கமலுடன் விக்ரம் விஜயுடன் மாஸ்டர் மற்றும் இந்தியில் நடிகர் ஷாருக்கானுடன் ஜவான் என்ற படத்திலும் வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார். எந்த கேரக்டர் என்றாலும் விஜய் சேதுபதி அழுத்தமான நடிப்பை தந்து விடுகிறார்.
இப்போது விஜய் சேதுபதி நடிப்பில் உருவான பிசாசு 2 மற்றும் டிரெயின் ஆகிய 2 படங்கள் விரைவில் திரைக்கு வர இருக்கின்றன. இதற்கிடையே விஜய் டிவியில் நடத்தப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் விஜய் சேதுபதி தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். அத்துடன் விளம்பர படங்களிலும் அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் 25ம் தேதி இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நித்யாமேனன் சரவணன் தீபா ஆர்கே சுரேஷ் காளி வெங்கட் மைனா நந்தினி யோகிபாபு உள்ளிட்டோர் நடிப்பில் தலைவன் தலைவி படம் வெளியானது. குடும்ப கதை பின்னணியில் உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஓட்டல் கடை உரிமையாளராக பரோட்டா மாஸ்டர் கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.
குடும்ப உறவுகளில் உள்ள பிரச்னைகளை, கணவன் மனைவி சண்டையை மையப்படுத்தி உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், இந்த படம் இதுவரை உலகளவில் ரூ. 90 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்திருக்கிறது. மகாராஜா படம் போலவே இந்த படமும் 100 கோடி ரூபாய் வசூல் சாதனை புரிந்து பாக்ஸ் ஆபீஸில் இணைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி, தலைவன் தலைவி படத்தின் அபார வெற்றியை தொடர்ந்து தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் ஏற்கனவே ரூ. 10 கோடி சம்பளம் வாங்கிய நிலையில் ரூ. 25 கோடி வரை சம்பளத்தை உயர்த்தியதாக கூறப்படுகிறது. மீண்டும் பாண்டிராஜ் இயக்கத்தில் அவர் ஒரு படத்தில் நடிக்க உள்ள நிலையில், தயாரிப்பு நிறுவனத்திடம் உயர்த்தப்பட்ட சம்பளம் குறித்து அவர் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.





