தமிழ் சினிமாவில் எப்போதாவது குறிஞ்சி மலர் போல மிகச் சிறந்த படங்கள் வெளி வருகின்றன. அந்த வரிசையில் தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளில் காக்கா முட்டை, குட் நைட், சித்தா, பண்ணையாரும் பத்மினியும், மகாராஜா போன்ற சிறந்த படங்கள் வெளி வந்துள்ளன. சினிமாத்தனம் இல்லாத யதார்த்தமான கதையம்சம் கொண்ட இந்த படங்களை தமிழ் சினிமா ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்று, மிகப்பெரிய வெற்றிப்படமாகவும் ஜெயிக்க வைத்திருக்கின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் வெளிவந்த லப்பர் பந்து படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது. இதில் தினேஷ், ஹரீஷ் கல்யாண், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, சுவாசிகா, காளி வெங்கட், பால சரவணன் உள்ளிட்டோரின் நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. இன்றும் தியேட்டர்களில் லப்பர் பந்து ஓடிக்கொண்டு இருக்கிறது.
நடிகர் விஜய் சேதுபதி நடித்த 50வது படம் மகாராஜா. இந்த படத்தை குரங்கு பொம்மை படத்தை இயக்கிய இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கியிருந்தார். கடந்த ஜூன் 14ம் தேதி வெளியான இந்த படத்தில் நட்டி, முனிஸ்காந்த், அருள்தாஸ், அனுராக் காஷ்யப், அபிராமி, சாச்சனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மிகப்பெரிய வெற்றியை பெற்ற இந்த படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான மகாராஜா படம், 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை படைத்ததாக கூறப்பட்டது. கடந்த ஜூன் 14ம் தேதி இந்த படம் வெளியாகி பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படமாக இருந்தது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் மகாராஜா படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பெண் பிள்ளைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் ரீதியான வன்கொடுமையை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டு இருந்தது. அதிலும் விஜய் சேதுபதி கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்த நிலையில், அவரது 50வது படம் மகாராஜா மிகப்பெரிய வெற்றிப்படமாகவும், அவருக்கு கம் பேக் கொடுத்த படமாகவும் அமைந்தது. மகாராஜா படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக இயக்குனர் நித்திலன் சாமிநாதனுக்கு படக்குழு சார்பில் பிஎம்டபிள்யு கார் சமீபத்தில் பரிசளிக்கப்பட்டது.
மகாராஜா படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் மற்றும் விஜய், படத்தின் இயக்குனர் சாமிநாதனை நேரில் அழைத்து பாராட்டினர். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் நித்திலன் சாமிநான் கூறுகையில், மகாராஜா படத்தை பார்த்த நடிகர் விஜய், நேரில் என்னை அழைத்து பாராட்டினார். ஒரு பெரிய கமர்ஷியல் நடிகர் இப்படி எல்லாம் படம் பார்ப்பாரா என்கிற வகையில், மகாராஜா படம் குறித்த அவரது விமர்சனம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. முக்கியமாக சிங்கம் புலி மற்றும் மகள் கதாபாத்திரங்களுக்கு இடையிலான அவருடைய பார்வையும், புரிதலும் ஆச்சரியப்பட வைத்தது எனக் கூறியிருக்கிறார்.





