தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்தும், மக்கள் பணி செய்ய விரும்பிய நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தார். பிறகு ஆகஸ்ட் மாதம் கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தினார். பிறகு அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் தனது கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை வெற்றிக்கரமாக நடத்தி முடித்தார்.
தி கோட் படத்துக்கு பிறகு தனது 69வது படத்தில் நடித்து வரும் விஜய், இத்துடன் தனது சினிமா பயணத்தை முடித்துவிட்டு, அரசியல் களத்தில் முழுமூச்சாக இறங்கி செயல்பட இருக்கிறார். 2026ம் ஆண்டில் முதல்வர் பதவியை குறிவைத்து பணிசெய்து வருகிறார். இதற்கான வியூகங்களை திட்டமிட்டு செயல்படுத்த உள்ளார்.
இதுவரை தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் 90 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், சட்டசபை தேர்தல் வருவதற்குள் 2 கோடியாக உறுப்பினர்கள் எண்ணிக்கைை அதிகரிக்க அவர் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மக்கள் சந்திப்பு பயண திட்டங்களையும் வகுத்து வருகிறார்.
அதன்படி தளபதி 69 ஷூட்டிங் முடிந்த பிறகு மாவட்டம் வாரியாக தொகுதிகளில் மக்களை நேரில் சந்திக்கவும், அவர்களது குறைகளை கேட்கவும் திமுக அதிமுக அல்லாத மாற்று அரசியல் கட்சியாக தவெக இருக்கும் என்று மக்களுக்கு உறுதியளிக்கவும் விஜய் காய்களை நகர்த்தி வருகிறார். 200 தொகுதிகளில் வெற்றி என எகத்தாள முழக்கமிடும் திமுகவின் கூட்டணி கணக்கெல்லாம் மைனஸ் ஆகி விடும் என்றும் விஜய் பேசியிருக்கிறார்.
நடிகர் விஜய், தமிழ் சினிமாவில் பல விஷயங்களில் உச்சம் தொட்ட சாதனையார். அவரது அப்பா எஸ்ஏ சந்திரசேகர் ஒரு இயக்குனர். இப்போது விஜயின் மகன் ஜேசன் சஞ்சயும் இயக்குனராக தமிழ் சினிமாவில் நுழைந்துள்ளார். விரைவில் லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் சந்தீப் கிஷன் நடிக்கும் ஒரு படத்தை விஜய் மகன் ஜேசன் சஞ்சய் டைரக்ட் செய்கிறார்.
இந்நிலையில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் தன் நெருங்கிய நண்பர் ஒருவரிடம் மனம் விட்டு பேசிய நடிகர் விஜய், எனக்கு ஒரு படம் டைரக்ட் செய்ய வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதனால் எதிர்காலத்தில் ஒரு படம் டைரக்ட் செய்வேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் தற்போது அந்த ஆசை நிறைவேறாமலேயே, அரசியல் களத்தில் இறங்கி விட்டார் என்பது அவரது ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.





