தமிழ் சினிமாவில் இருந்து பல பிரபலங்கள் அரசியலுக்கு வந்திருக்கின்றனர். இதுவரை அப்படி வந்தவர்களின் மிக சொற்பமானவர்கள் மட்டுமே அரசியலில் தாக்கு பிடித்திருக்கின்றனர். மக்களின் வரவேற்பை பெற்று இருக்கின்றனர். ஆனால் பெரும்பாலானவர்கள் கட்சி ஆரம்பித்து அரசியலிலும் காணாமல் போனார்கள். சினிமாவிலும் தங்களுக்கான வாய்ப்பை இழந்தார்கள்.
அந்த வகையில் நடிகர்கள் சிவாஜி கணேசன், பாக்யராஜ், டி ராஜேந்தர், கார்த்திக், கருணாஸ், சரத்குமார், கமல்ஹாசன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலரை சொல்லலாம். தமிழ் சினிமாவை சேர்ந்த நடிகர்களில் அரசியலுக்கு வந்து மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றவர்கள் இதுவரை இரண்டே பேர்தான். ஒருவர் எம்ஜிஆர் அடுத்து விஜயகாந்த். அவர்கள் இருவர் மட்டுமே மக்களின் பலத்த வரவேற்பை ஆதரவை பெற்றார்கள்.
ஆனால் இப்போது நடிகர் விஜய்யும் அரசியலில் குதித்திருக்கிறார். மக்கள் செல்வாக்கு என்பது விஜய்க்கு இருக்கிறது என்றாலும் அவர்கள் ரசிகர்களாக தான் இருக்கிறார்களே தவிர, விஜய் அபிமானிகளாக இருக்கிறார்களா என்பது உறுதியாக சொல்ல முடியாது. ஏனென்றால் விஜயை பொறுத்தவரை நல்ல நடிகராக ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். அவரது ரசிகர்களாக இருக்கும் அனைவருமே விஜயை அரசியல் தலைவராக ஏற்றுக் கொள்வார்களா என்பது சந்தேகம் தான்.
ஏனென்றால் நடிகர் கமல்ஹாசனை எல்லோருக்குமே பிடிக்கும். ஒரு நடிகராக நல்ல கலைஞராக மக்கள் மனதில் இடம் பிடித்தவர்தான். ஆனால் அவர் மக்கள் நீதி மய்யம் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் ஒருமுறை கூட எம்பி, எம்எல்ஏ என அவரது கட்சி சார்பில் யாரும் சட்டசபைக்கு நுழையவில்லை. அவரே கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் தோற்று போனார் என்பது காலத்தின் வரலாறு.
சீனியர் கமலுக்கு இப்படி ஒரு நிலை என்றால், கமலுக்கு ஜூனியர் விஜய் எந்த அளவுக்கு அரசியலில் தாக்கு பிடிப்பார் என்பதுதான் கேள்வி. இதற்கிடையே கட்சி துவங்கியது முதல் பல விமர்சனங்களை நடிகர் விஜய் எதிர்கொண்டு வருகிறார். குறிப்பாக தமிழக வாழ்வுரிமை கட்சியில் டிவிகே என்ற பெயரை தனது கட்சியில் கொண்டு இருப்பது, பகுஜன் சமாஜ் கட்சியின் யானை சின்னத்தை தனது கட்சிக்கொடியில் வைத்திருப்பது, சமீபத்தில் விநாயகர் சதுர்த்தி, தமிழ் புத்தாண்டு போன்ற தமிழர் பண்டிகைளுக்கு வாழ்த்துகள் சொல்லாமல் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லி சர்ச்சையில் சிக்கியது என விஜய் மீதான விமர்சனங்கள் தான் அதிகரித்து வருகின்றன.
அத்துடன் நடிகர் விஜயை அரசியல் களத்தில் வழி நடத்தப் போவது யார் என்பதும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ஏனென்றால் அரசியல், சினிமா அனுபவம் மிக்க அவரது அப்பா எஸ் ஏ சந்திரசேகரை அவர் தனது ஆலோசகராக வைத்துக் கொள்ளவில்லை. புஸ்லி ஆனந்த் எந்த அளவுக்கு விஜய்க்கு வழி காட்டுவார் என்று தெரியவில்லை. அதனால் திமுக அதிமுக என்ற திராவிட கட்சிகளை வீழ்த்த நடிகர் விஜய் என்ன அஸ்திரங்களை கையில் வைத்திருக்கிறார் என்பதில் தமிழக மக்களுக்கு பெரும் குழப்பம் இருக்கிறது.





