நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமிழ் சினிமாவின் அடையாளமாக கருதப்படுபவர். நடிப்பு பல்கலை கழகம் என்றும் அழைக்கப்படுபவர். அவரது இளைய மகன் பிரபு தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். அந்த குடும்பத்தில் இருந்து 3வது தலைமுறையாக தமிழ் சினிமாவில் வந்தவர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு.
தயாரிப்பாளர் எஸ் எஸ் லலித் குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 25ம் தேதி வெளியான படம் சிறை. இந்த படத்தில் விக்ரம் பிரபு எல் கே அக்சய் குமார் அனிஷ்மா மூணார் ரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
அதேபோல் ஜீ5 ஓடிடி தளத்திலும் சிறை படம் வெளியாகி இந்த திரைப்படம் மிகப்பெரிய ஆதரவை ரசிகர்களிடம் பெற்றது. குறிப்பாக இந்த படத்தின் கதையும் யதார்த்தமான கதைக்களமும் மிகவும் பாராட்டை பெற்றன. இந்நிலையில் சிறை படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் படத்தின் நாயகன் நடிகர் விக்ரம் பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.
அப்போது நடிகர் விக்ரம் பிரபு பேசியதாவது, ஒவ்வொரு படத்தில் நடிக்கும் போதும் தாத்தா சிவாஜி பெயரையும் அப்பா பிரபுவின் பெயரையும் காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்பும் பயமும் என்னை சூழ்ந்து கொள்கிறது. அந்த வகையில் நான் நடிகர் ரஜினிகாந்த் சொன்னதைப் போல காது கேட்காத தவளையாகவே சினிமாவில் பயணித்து வருகிறேன்.
கும்கி படத்தில் இருந்து சிறை படம் வரை காது கேட்காத தவளையாகவே இருந்து வருகிறேன். வெற்றியும் தோல்வியும் மாறி மாறி சந்தித்து வருகிறேன். சினிமாவில் உள்ள அரசியல், தட்டியும் தூக்கியும் விடும் ஆசாமிகள் என எல்லா விஷயங்களையும் கற்றுக் கொண்டுள்ளேன். 25 ஆண்டுகள் கடந்தும் இதுதான் ஆரம்பம் என்பது போல நகர்கிறேன்.
என்னுடைய முதல் படத்தில் கும்கி யானையை பிடித்து சென்றது போல ஒவ்வொரு நாளும் இந்த சினிமாவின் கையைப் பிடித்து சென்று கொண்டிருக்கிறேன் என்று விக்ரம் பிரபு ஆதங்கமாக பேசியிருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிப்புக்கே இமயமாக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவரது குடும்ப வாரிசு விக்ரம் பிரபு இப்படி வேதனையாக பேசியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பலத்த வருத்தத்தை தந்துள்ளது.





