நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துவிட்டார். தமிழக வெற்றி கழகம் என்று தனது கட்சிக்கு பெயர் சூட்டியுள்ளார். இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் கட்சி பெயரை பதிவு செய்ய விண்ணப்பித்துள்ள நிலையில், தமிழக அரசியலில் தீவிரமாக களத்தில் இறங்குகிறார். எம்ஜிஆர். விஜயகாந்த், கமல்ஹாசனை தொடர்ந்து அரசியல் களத்துக்கு முக்கிய நடிகரான விஜய் வந்திருக்கிறார்.
நாடாளுமன்ற தேர்தல் எங்கள் இலக்கல்ல. வரும் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்பதை தெளிவுபடுத்திய விஜய், 2026ம் ஆண்டு நடக்கப் போகும் சட்டசபை தேர்தல் தான் எங்கள் இலக்கு என்பதையும் கூறிவிட்டார். இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிப்பேன். அதன் பின் முழுநேரமும் அரசியல் பணியில் இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
விஜய் அரசியலுக்கு வந்தது குறித்து மக்கள் நீதிமய்ய தலைவர் நடிகர் கமல்ஹாசன், நடிகர் பார்த்திபன், நாம் தமிழர் கட்சி சீமான், திமுக இளைஞரணி மாநிலச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், பாஜக சார்ந்த நடிகை குஷ்பு, கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். தொடர்ந்தும் சிலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இப்போது தமிழக அரசியல் களத்தில் கமல்ஹாசன்( மக்கள் நீதிமய்யம்), விஜய் (தமிழக வெற்றி கழகம்) தேமுதிக ( பிரேமலதா) சரத்குமார் ( சமத்துவ மக்கள் கட்சி) உள்ளிட்டோர் இருக்கின்றனர். நடிகர்கள் கர்ணாஸ், மன்சூர் அலிகான், பாக்யராஜ், டி ராஜேந்தர், நவரச நாயகன் கார்த்திக் ஆகியோரும் கட்சி தலைவர்கள்தான். ஆனால் ஆக்டிவ்வில் இல்லை.
இந்நிலையில் நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ள டி ராஜேந்தர், அரசியல் என்பது பொது வழி. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். யார் வேண்டுமானாலும் கட்சி துவங்கலாம். விஜய்க்கு வாழ்த்துகள். அவரை பண்ணவில்லை விமர்சனம். நான் கடவுளிடம் கேட்பது தமிழ்நாட்டு மக்களுக்கு விமோச்சனம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
நடிகர் மற்றும் இயக்குநர் சமுத்திரக்கனி கூறியுள்ள வாழ்த்து செய்தியில், திரை உலகின் உச்சத்தில் இருக்கும்போது மக்கள் பணியாற்ற வந்த தைரியமான முதல் மனிதன். பிரபஞ்சம் உம்மை வெல்லச் செய்யட்டும். உம் கனவுகள் மெய்படட்டும். வாழ்த்துகள் சகோதரா எனக் குறிப்பிட்டுள்ளார்.





