நேதாஜி புரொடக்சன் சார்பில் சோழா சக்கரவர்த்தி ஜிஎம் பிலிம் கார்ப்பரேஷன் இணைந்து தயாரித்த படம் திரௌபதி 2. பழைய வண்ணாரப்பேட்டை திரௌபதி பகாசூரன் படங்களைத் தொடர்ந்து இந்த படத்தை மோகன் ஜி டைரக்ட் செய்திருக்கிறார். ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாகவும் ரக்சனா இந்துசூடன் கதாநாயகியாகவும் நடித்திருக்கின்றனர்.
மேலும் இந்த படத்தில் நட்டி நடராஜ் வேல ராமமூர்த்தி ஒய்ஜி மகேந்திரா என பல நடிகர்கள் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர். திரௌபதி 2 படம் இன்று (23ம் தேதி) வெளியாகிறது. இதை முன்னிட்டு இந்த படத்தின் சிறப்பு காட்சி நேற்று திரையிடப்பட்டது. இதில் பத்திரிகையாளர்கள், பாஜக மூத்த நிர்வாகி எச் ராஜா, நடிகை கஸ்தூரி நடிகர் ரஞ்சித் இயக்குனர் ரஞ்சித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திரௌபதி படத்தின் இயக்குனர் மோகன்ஜி கூறுகையில், இந்த படம் 300 தியேட்டர்களுக்கு மேல் வெளியாகிறது. முதல் முறையாக வரலாற்றுப் படத்தை எடுத்துள்ளோம். நம் முன்னோர்கள் எப்படி நம் நாட்டை காத்தனர் என்பதை எடுத்துரைக்கும் படம். இதுவரை என்னுடைய படங்கள் வெளியாகும் போதெல்லாம் ஏதேனும் ஒரு சர்ச்சை இருக்கும். ஆனால் தற்போது இந்த படத்திற்கு சர்ச்சை வரவில்லை. இந்த படம் இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் இல்லை என்று கூறினார்.
நடிகை கஸ்தூரி கூறியதாவது, பாகுபலி போன்ற ஒரு படத்தை எளிதான பட்ஜெட்டில் எடுத்துள்ளனர். அதில் இயக்குனர் மோகன் ஜி வெற்றி பெற்றுள்ளார். முதல் காட்சியிலிருந்து இறுதிக்காட்சி வரைக்கும் திரௌபதி என்ற பெண்ணை மையப்படுத்தி படம் எடுத்துள்ளனர். இந்த படம் அரசியல் தாண்டி நல்ல முயற்சி. சனாதனத்தை ஒழிக்க முயற்சி செய்கின்றனர். 700 ஆண்டுகளாக இன்றுவரை ஒழிக்க முடியவில்லை. 1000 ஆண்டுகள் ஆனாலும் சனாதனத்தை ஒழிக்க முடியாது.
சென்சார் போர்டில் பாஜக சேர்ந்தவர்கள் மட்டும் இல்லை, திமுகவை சேர்ந்தவர்களும் பலர் உள்ளனர். சென்சார் போர்டு பாஜகவின் கைப்பாவை இல்லை. ஜனநாயகன் படத்திற்கு தமிழகத்தில் இருந்து தான் எதிர்ப்பு வந்தது. சினிமா என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது தான். விஜய் விசில் சின்னம் தான் கேட்பார் என்று ஒரு ஆண்டுக்கு முன்பே நான் கூறிவிட்டேன். பிகில் என்ற படத்தில் இருந்து தான் எடுத்து இருப்பார்கள்.
திமுகவை ஒழிக்க வேண்டும் என்றால் அதிமுகவுடன் சேர்ந்து விஜய் பயணம் செய்ய வேண்டும். பவன் கல்யாண் மாதிரி அவரும் துணை முதல்வராக நினைக்க வேண்டும் என்று நடிகை கஸ்தூரி கூறியிருக்கிறார். திரௌபதி 2 படம் குறித்து பாஜக மூத்த நிர்வாகி எச் ராஜா கூறுகையில், இந்த படம் பள்ளிக்கூடங்களில் பாடமாக வைக்க வேண்டிய படம். ஒரு காவியத்தை படமாக எடுத்திருக்கிறார்கள் என்று எச் ராஜா கூறினார்.





