இயக்குனர் பாலு மகேந்திராவிடம் பாலா வெற்றிமாறன், சீனு ராமசாமி உள்ளிட்ட ஏராளமான இயக்குனர்கள் உதவியாளராக பணி புரிந்துள்ளனர். பிற்காலத்தில் இவர்கள் அனைவரும் ரத்தமும் சதையுமாக திரைப்படங்களை எடுக்க, தனது குருநாதரை போல் கதை போகும் போக்கில் மெல்லியதான திரைப்படங்களை மட்டும் சீனு ராமசாமி எடுத்து வருகிறார்.
பரத் நடிப்பில் வெளியான கூடல்நகர் திரைப்படம் தான் சீனு ராமசாமிக்கு முதல் திரைப்படம். பரத் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்த இந்த திரைப்படம், வெளியாகி தோல்வியை சந்தித்தது. முதல் படமே தோல்வியை கொடுத்ததால் அடுத்த படத்தை மிக கவனமாக எடுத்தார் சீனு ராமசாமி. தென்மேற்கு பருவக்காற்று ஆக இது உருவாக விஜய் சேதுபதி அதில் கதாநாயகனாக நடித்தார்.
இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல முறையில் பேசப்பட்டு, தேசிய விருதையும் பெற்றது. இதன் பிறகு, நீர்ப்பறவை திரைப்படத்தை எடுத்து மீண்டும் ஒருமுறை வெற்றி பெற்றார் இயக்குனர். பிறகு அவர் இயக்கத்தில் தர்மதுரை படம் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. சீனு ராமசாமியின் இயக்கத்தின் ஸ்டைலை பலரும் விரும்ப ஆரம்பித்தனர்.
தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினை வைத்து கண்ணே கலைமானே திரைப்படத்தை சீனு ராமசாமி இயக்கினார். ஆனால் இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக வெற்றி பெறவில்லை. பிறகு மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து மாமன்னன் திரைப்படத்தை அவர் எடுத்தார். இந்த நிலையில் தற்போது அவர் கோழிப்பண்ணை செல்ல துரை என்னும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்த நிலையில் அவர் இயக்கத்தில் எடுக்கப்பட்ட இடம் பொருள் ஏவல் திரைப்படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது. அந்தப் படத்தில் நடித்த மனிஷாவுக்கு சீனு ராமசாமி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பிரபல சினிமா விமர்சகர் ஒருவர் தெரிவித்தார். இந்த விஷயம் மிகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பதில் கூறிய சீனு ராமசாமி, ஒரு குப்பை கதை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மனிஷா தனக்கு நன்றி கூறியதை வீடியோவாக வெளியிட்டு இருந்தார்.
அதில் அவர் 10 வருடம் மனிஷா நடித்துவிட்டு சென்றிருக்கிறார்கள் என்றும், திரும்ப வந்து எனது படத்தில் கூட நடிப்பார்கள் எனவும் குறிப்பிட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள நடிகை மனிஷா, ஒரு குப்பை கதை இசை வெளியீட்டு விழாவில் எல்லோரிடமும் நன்றி தெரிவிப்பது போல தான், சீனு ராமசாமிக்கும் நன்றி கூறினேன். என்னிடம் அநாகரிகமாக நடந்து கொண்டவரிடம், மீண்டும் நடிக்க என்ன தேவை இருக்கிறது. சீனு ராமசாமி உண்மையை பேச வேண்டும் என்று கூறியிருக்கிறார். நடிகையின் கருத்து திரைத்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.





