மலையாளத்தில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நித்யா மேனன். தமிழிலும் நிறைய படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறார். குறிப்பாக ஓ காதல் கண்மணி 24 மாலினி 22 பாளையங்கோட்டை காஞ்சனா 2 சைக்கோ திருச்சிற்றம்பலம் மெர்சல் இருமுகன் உள்ளிட்ட படங்களில் நித்யா மேனன் நடித்திருக்கிறார்.
இதில் தனுஷ் உடன் திருச்சிற்றம்பலம் என்ற படத்தில் ஷோபனா என்ற கேரக்டரில் நடித்தததற்காக மத்திய அரசின் சிறந்த நடிகை தேசிய விருது நித்யா மேனனுக்கு வழங்கப்பட்டது. விருது பெறும் அளவுக்கு அந்த படத்தில் நித்யா மேனன் நடிப்பு அவ்வளவு அழுத்தமாக இல்லை என்றும் விமர்சனம் எழுந்தது. ஆனால் அந்த ஆண்டில் 2 பேர் சிறந்த நடிகை விருதை பகிர்ந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
இப்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதியுடன் நித்யா மேனன் நடித்த படம் தலைவன் தலைவி நாளை ரிலீஸாகிறது. இந்த படம் குடும்ப கதைக்களத்தில் உருவாகியுள்ளது. கணவன் மனைவியாக விஜய் சேதுபதி நித்யா மேனன் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். பரோட்டா மாஸ்டர் ஆகாச வீரன் என்ற கேரக்டரில் விஜய் சேதுபதி இந்த படத்தில் நடித்திருக்கிறார்.
நடிகை நித்யா மேனன் கடந்த 1988ம் ஆண்டில் பிறந்தவர். அவருக்கு இப்போது 37 வயதாகிறது. ஆனால் இதுவரை அவர் திருமணம் செய்துக்கொள்ளவில்லை. திருமணம் குறித்து அவரது பெற்றோர் பலமுறை அவரிடம் பேசிய நிலையில், திருமணம் செய்துக்கொண்டு நீங்கள் சந்தோஷமாக வாழ்கிறீர்களா, அப்புறம் எதற்கு என்னை திருமணம் செய்துக்கொள்ள கேட்கிறீர்கள் என்று கேட்டு அவர்களை வாயடைக்க செய்திருக்கிறார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை நித்யா மேனன் கூறியதாவது, குறிப்பிட்ட வயது வந்ததும் எனக்கும் காதல் அனுபவம் கிடைத்தது. ஒவ்வொரு அனுபவமும் வலியையே தந்தது. எத்தனை முறை காதல் உறவில் விழுந்தேனோ அத்தனை முறை என் இதயம் உடைந்து போனது. ஒரு அழகான வாழ்க்கையை வாழ வேண்டும் என்றெல்லாம் கனவுகள் இருந்தன.
ஆனால் அப்படிப்பட்ட ஒருவர் எனக்கு கிடைக்கவே இல்லை. என் வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று எந்த நிபந்தனையுடனும் நான் வாழவில்லை. ஆத்மார்த்தமான துணை கிடைத்தால் நாளை கூட திருமணம் செய்துக்கொள்ளலாம். ஆனால் இப்போது எனக்கு இருக்கும் தனிமை வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியை தருகிறது என்று நடிகை நித்யா மேனன் அந்த நேர்காணலில் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.





