தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். சமீபத்தில் அவரது நடிப்பில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படம் வெளியாகி 455 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. இப்போது தளபதி 69 என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார். கடந்த ஞாயிறு அன்று விக்கிரவாண்டியில் அவரது கட்சியின் முதல் அரசியல் மாநாடு நடந்தது. அதில் அவரது பேச்சு அரசியல் வட்டாரத்திலும், மக்கள் மத்தியிலும் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ராதிகா தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக உள்ளார். முன்னணி நடிகையாக 1980, 90 களில் ரஜினி, கமல், சத்யராஜ், பிரபு, கார்த்திக் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்தவர். குறிப்பாக நடிகர் விஜயகாந்துடன் நிறைய படங்களில் ராதிகா நடித்திருக்கிறார்.
நடிகை ராதிகா, நடிகர் சரத்குமாரை 3வது திருமணம் செய்துக்கொண்டார். நடிகர் சரத்குமார் தலைவராக உள்ள சமத்துவ மக்கள் கட்சியில் முக்கிய பொறுப்பிலும் ராதிகா இருக்கிறார். மேலும் ராடன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் பெயரில் சித்தி, அண்ணாமலை, வாணி ராணி என பல டிவி சீரியல்களை ராதிகா தயாரித்திருக்கிறார். டிவி சீரியல்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நடந்த விஜயின் அரசியல் மாநாடு குறித்து நடிகை ராதிகா கூறியதாவது, முதலில் நடிகர் விஜய் தனியாக கட்சி தொடங்கியிருப்பதற்கு என்னுடைய மனதார வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருமே அரசியலுக்கு மக்களுக்கு நன்மை செய்யத்தான் வருகிறார்கள். அதை அவர்களுடைய கொள்கைகளுக்கு ஏற்ப செய்வது நல்லதுதான்.
தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நட்சத்திரமாக திகழ்ந்து வரும் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று முடிவு செய்தது மிகச்சிறந்த முடிவுதான். ஆனால் அது எனக்கு பெரிய அளவில் ஆச்சரியங்களை கொடுத்தது. சிறுவயதில் இருந்து எனக்கு விஜயை தெரியும். அவருடைய தந்தையின் இயக்கத்தில் நான் பல படங்களில் நடித்திருக்கிறேன். ஆகையால் இன்று அவர் இந்த வயதில் இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
நடிகர் விஜய் யோசித்துதான் அனைத்து விஷயங்களையும் பேசுவார். அப்படி தான் திமுகவை நேரடியாக எதிர்த்து பேசியிருக்கிறார். ஆனால் பாஜகவை எதிர்த்து பேசுவதற்கு முன் கட்டாயம் அவர் யோசித்துதான் பேசுவார். அதிமுக பற்றி ஏன் பேசவில்லை என்பது எனக்கு தெரியவில்லை. அரசியலை அவர் வேறு விதமாக பார்த்து வருகிறார். தெறி படத்தில் அவரோடு நான் நடித்திருக்கிறேன். அவர் பொதுவெளியில் பெரிதாக பேசக்கூட மாட்டார். ஆனால் அந்த மாநாட்டு மேடையில் அவர் அவ்வளவு ஆக்ரோஷமாக பேசியது எனக்கு ஆச்சரியங்களை தந்திருக்கிறது என்று நடிகை ராதிகா கூறியிருக்கிறார்.





