ஒரு நடிகரை ஹீரோவாக்குவது என்பது இயக்குனரின் திறமைதான். ஒரு நடிகரால் இப்படிப்பட்ட நடிப்பையும் சிறப்பாக வெளிப்படுத்த முடியும், அதை ரசிகர்களும் பலத்த வரவேற்புடன் ஏற்றுக்கொள்வார்கள் என்று தீர்மானிப்பதும் இயக்குனர்கள்தான். அப்படி தான் வில்லன்களாக நடித்த ரஜினி, சத்யராஜ், சரத்குமார் போன்றவர்கள் கதாநாயகன்களாக மாறினார்கள்.
அந்த வரிசையில் காமெடி நடிகராக இருந்த சூரியை, வெற்றிமாறன் அவர் இயக்கிய விடுதலை படம் மூலம் ஹீரோவாக மாற்றினார். குமரேசன் என்ற கான்ஸ்டபிள் கேரக்டரில் சூரியை மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்த செய்தார். அதன் பிறகு துரை செந்தில்குமார் சூரியை, சொக்கன் என்ற கேரக்டரில் கருடன் படத்தில் வாழ வைத்திருந்தார்.
விடுதலை படம் அடைந்த மிகப்பெரிய வெற்றி, அடுத்து கருடன் படம் கொடுத்த பலத்த வெற்றியை தொடர்ந்து அடுத்து, சூரி நடிப்பில் கொட்டுக்காளி படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். கூழாங்கல் படத்தின் இயக்குனர் பிஎஸ் வினோத் ராஜ் இந்த படத்தை இயக்கி உள்ளார்.
சினிமாவில் ரசிகர்களை ஏமாற்றும், பிரமாண்டம் காட்டி திகைக்க வைக்கும் நிஜத்துக்கு பக்கத்தில் வர அருகதையற்ற பொய் விஷயங்களை காட்டி மாயாஜாலம் காட்டும் டாம்பீக இயக்குனர்களுக்கு மத்தியில், வாழ்க்கையின் யதார்த்தம் பேசும் கதைகளை படமாக்கும் இயக்குனர்கள் வெகு சிலரே. அவர்களில் ஒருவர்தான் கூழாங்கல் படம் இயக்கிய இயக்குனர் பிஎஸ் வினோத் ராஜ்.
கொட்டுக்காளி படத்தில் பாண்டி என்ற கேரக்டரில் சூரி நடித்திருக்கிறார். இதில் மலையாள நடிகை அன்னாபென் கதாநாயகியாக நடித்துள்ளார். இதுவரை கொட்டுக்காளி படம், வெளிநாடுகளில் நடந்த சில சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பலத்த பாராட்டுகளை பெற்றிருக்கிறது. அதனால் இந்த படம் சினிமா ரசிகர்களை வெகுவாக கவரும் என்பதில் சந்தேகமில்லை.
இந்நிலையில், கொட்டுக்காளி படக்குழு தொடர்ந்து பிரமோசன் நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு வருகிறது. இதில் பங்கேற்ற நடிகர் சூரி கூறுகையில், விடுதலை படத்தில் நடிக்கும் போதே எனக்கு சில படங்களில் நாயகனாக நடிக்க வாய்ப்புகள் தேடி வந்தது. அப்போது பிஎஸ் வினோத் ராஜ் இயக்கும் படத்தில் நடிக்க அழைக்கின்றனர் என்று வெற்றிமாறனிடம் கூறினேன். விடுதலை படத்தை முடித்துவிட்டு மற்ற படங்களை ஒத்துக்கொள். ஆனால் வினோத் ராஜ் படத்தை மிஸ் பண்ணி விடாதே, உடனடியாக கமிட் ஆகிவிடு. ஆகச்சிறந்த இயக்குனர் அவர் என்று வெற்றிமாறன் எனக்கு அட்வைஸ் செய்தார், என்று சூரி கூறினார்.





