நடிகர் அஜித்குமார் கடந்த ஆறு மாதங்களாக நடித்து வந்த படம் விடாமுயற்சி. இந்த படம் ஷூட்டிங் கடந்தாண்டு அக்டோபர் மாதம் துவங்கிய நிலையில், ஜனவரி மாதம் வரை தொடர்ந்து நடந்தது. அதன்பிறகு மூன்று மாதங்களுக்கு மேலாக படப்பிடிப்பு நடக்கவில்லை. விடாமுயற்சி படப்பிடிப்பு பாதியில் பிரேக்கப் ஆனதால் அஜித் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர்.
இன்னும் படப்பிடிப்பு பாதியில் நின்றுள்ள நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தை முடித்துவிட்டு, விடாமுயற்சி படத்தில் மீண்டும் நடிக்கிறேன் என்று அந்தப் படத்தை தயாரிக்கும் நிறுவனம் லைகா புரடக்சன்ஸ் சுபாஷ்கரனிடம் ஏற்கனவே அஜித்குமார் கட் அண்ட் ரைட்டாக பேசி விட்டார்.
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜீத்குமாருடன் திரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோர் நடித்த விடாமுயற்சி படம், ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அஜர்பைஜானில் நான்கு மாதங்களுக்கு மேல் ஷூட்டிங் நடந்த நிலையில், இந்த படம் முடிவடையாமல் இன்னும் இரண்டு மாதங்களுக்கு மேல் படப்பிடிப்பு பாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
வேட்டையன், இந்தியன் 2, கேம் சேஞ்சர், விடாமுயற்சி என்ற நான்கு பெரிய படங்களை ஒரே நேரத்தில் தயாரித்ததால் பல விதங்களில் சிக்கலில் லைகா புரொடக்ஷன் நிறுவனம் சிக்கியது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் படமும் லைக்கா ப்ரொடக்சன்ஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய நஷ்டத்தை கொடுத்தது. அதனால் விடாமுயற்சி படம் பாதியில் அந்தரத்தில் தொங்குகிறது என்பதே கசப்பான உண்மை.
இந்த சூழ்நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படப்பிடிப்பை, மே 10ம் தேதி துவங்குவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். ஆனால் ஒரு நாள் முன்னதாகவே நேற்று ஹைதராபாத்தில் உள்ள சாரதி ஸ்டுடியோவில் குட் பேட் அக்லி முதல்கட்ட படப்பிடிப்பு துவங்கியது. ஆனால் நேற்று படப்பிடிப்பு துவங்கிய நிலையில், இன்றுடன் படப்பிடிப்பு நிறைவடைந்து 2 நாட்களில் படக்குழு சென்னை திரும்பி இருக்கிறது. நேற்று சூட்டிங்கை ஆரம்பித்து இன்றே படக்குழு பிரேக்கப் சொல்லி சென்னைக்கு திரும்பியிருப்பது அஜித் ரசிகர்களை பலத்த அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
இதற்கு காரணம், ஆந்திராவில் இப்போது நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் பரபரப்பாக உள்ளது. மே 13ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்க உள்ள நிலையில், அந்த பரபரப்பான சூழ்நிலையில் படப்பிடிப்பை நடத்துவது மிகப்பெரிய சிக்கல் என்பதால், ஷூட்டிங்கை 2 நாளில் முடித்துவிட்டு சென்னை திரும்பி விட்டனர். ஓட்டுப்பதிவு முடிந்த பிறகு, அடுத்த வாரத்தில் மீண்டும் ஐதராபாத்தில் ஷூட்டிங்கை துவங்க இருக்கிறார்கள்.





