நடிகர் ராகவா லாரன்ஸ் நடிகர் ரஜினிகாந்தின் மிக தீவிரமான ரசிகர். தன்னுடைய குரு ரஜினிகாந்த் தான் என்று அடிக்கடி சொல்லிக் கொள்ளும் சீடர். ஆனால் ரஜினியிடம் இல்லாத மிகப்பெரிய ஒரு நல்ல பழக்கம் இவரிடம் உள்ளது என்றால், அது மற்றவர்களுக்கு தானாக முன்வந்து உதவுவதுதான். அதுவும் கோடிக்கணக்கான பணத்தை மற்றவர்களுக்கு உதவ ஒதுக்குபவர்.
சினிமாவில், குருவாக மாஸ்டர் ராகவா லாரன்ஸ்க்கு ரஜினிகாந்த் இருந்தாலும், மற்றவர்களுக்கு உதவும் விஷயத்தில், ரஜினிக்கே குருவாக இருக்கும் அளவுக்கு தகுதி மிக்க மனிதராக இருக்கிறார் ராகவா லாரன்ஸ். ஏனெனில் 150 கோடி ரூபாய் ஒரு படத்துக்கு சம்பளம் வாங்கும் ரஜினிகாந்த், அதில் ஒரு லட்சம் ரூபாய் கூட யாருக்கும் உதவி செய்ய மாட்டார் என்பதுதான் கசப்பான உண்மை.
இந்நிலையில், மாஸ்டர் ராகவா லாரன்ஸ் மீது இப்போது ஒரு தவறான அபிப்ராயம் வந்திருக்கிறது. ஏனென்றால் கேப்டன் விஜயகாந்த் மகன் நடிக்கும் படைத்தலைவன் படத்தில், ஒரு சண்டைக்காட்சியில் கேமியோ ரோலில் நடித்து தருவதாக, ஏற்கனவே தெரிவித்திருந்தார் மாஸ்டர் ராகவா லாரன்ஸ். இது அவர் தானாக முன்வந்து ஒப்புக்கொண்டதுதான்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மறைந்த போது, அவரது வீட்டுக்கு தன் அம்மாவுடன் சென்று துக்கம் விசாரித்து விட்டு வந்தார் மாஸ்டர் ராகவா லாரன்ஸ். அப்போதுதான், அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், விஜயகாந்த் நிறைய தர்ம காரியங்களை செய்தவர். உதவி என்று தன்னை நாடி வந்தவர்களுக்கு எல்லாம் உதவியவர்.
அதனால் அவரது மகன் சண்முக பாண்டியனுக்கு நான் உதவி செய்ய விரும்புகிறேன். அவர் நடிக்கும் படத்தில், கேமியோ ரோலில் நடிக்கிறேன். அதே போல் அவர் விரும்பினால், இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நான் சண்முக பாண்டியனுடன் நடிக்கிறேன். இது விஜயகாந்துக்கு நான் செய்ய வேண்டிய கடமையாக நினைக்கிறேன் என்று கூறியிருந்தார்.
ஆனால் இதுவரை படைத்தலைவன் படத்தில், கேமியோ ரோலில் நடிக்க ஒத்துக்கொண்ட மாஸ்டர் ராகவா லாரன்ஸ், சண்டைக்காட்சியில் நடிக்க தேதி தராமல் இருக்கிறார். அதனால் படம் முடிவடைந்தும் போஸ்ட் புரடக்சன் பணிகளை தொடர முடியாமல், படக்குழு காத்திருக்கிறது. அவர் நடித்தால்தான் படத்தை முடிக்க முடியும் என்ற நிலையில், மாஸ்டர் ராகவா லாரன்ஸ் தாமதிப்பது, சொன்ன சொல்லை இப்படி மறந்துவிட்டாரே என புலம்ப வைத்துள்ளது.





