நடிகர் அருண் விஜய் தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் முதலில் சூர்யா தான் நடித்து வந்தார். அவரது 2டி என்டர்டைன்மென்ட் திரைப்படமே இதனை தயாரித்தது. கன்னியாகுமரியில் இதற்கான சூட்டிங் தொடங்கியது. ஆனால் அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக, சூர்யா படத்தில் இருந்து வெளியேறினார்.
இது தொடர்பாக அறிக்கை விட்ட பாலா, நந்தா பிதாமகன் போல இன்னொரு படத்தில் சந்திப்போம் என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்துதான் வணங்கான் திரைப்படத்திற்குள் வந்தார் அருண் விஜய். இயக்குனர் பாலா திரைப்படம் என்பதால் வேறு எந்த திரைப்படத்திலும் கமிட் ஆகாமல் அந்த திரைப்படத்திலேயே முழுமூச்சாக தனது கவனத்தை அவர் செலுத்தி வந்தார். இந்த நிலையில் தற்போது வணங்கான் படப்பிடிப்பும் நிறைவு பெற்றுவிட்டது.
இத நடுவே அருண் விஜய்க்கு வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு பன்னிரண்டாம் தேதி மிஷன் சாப்டர் ஒன் என்ற திரைப்படம் வெளியாகிறது. இந்தப் படத்தில் எமி ஜாக்சன் நிமிசா சஜயன் ஆகியோர் நடித்துள்ளனர். ஏ எல் விஜய் இயக்கியுள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. முழுக்க முழுக்க வெளிநாடுகளில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது, முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வளர்ந்து கொண்டிருக்கும் அருண் விஜய், ஆரம்பத்தில் அந்த நிலையை எட்டுவதற்கு என்னை அறிந்தால் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதேபோல் மகிழ் திருமேனி படங்களும் அருண் விஜய்க்கு கை கொடுத்தன. இருவர் கூட்டணியில் வெளியான தடையற தாக்க மற்றும் தடம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெற்றி பெற்றன.
க்ரைம் திரில்லர் பாணியில் எடுக்கப்பட்ட இந்த இரு திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். இந்த நிலையில் தற்போது மகிழ் திருமேனி அஜித்துடன் இணைந்து விடாமுயற்சி படத்தை எடுத்து வருகிறார். அஜர்பைஜான் நாட்டில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் திரிஷா, அர்ஜுன், பிக் பாஸ் புகழ் ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இந்தத் திரைப்படம் குறித்து அருண் விஜய் கூறியிருப்பதாவது, விடாமுயற்சி திரைப்படம் ஒரு மிகப்பெரிய ப்ராஜெக்ட். இந்தத் திரைப்படத்திற்கு மகிழ் திருமேனி சூட்டிங் சென்ற பிறகே, நான் அவரிடம் பேசினேன். நான் பாலா சார் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருப்பது மகிழ் திருமேனிக்கு தெரியும். அதனால் தான் அவர் என்னை இந்த திரைப்படத்திற்கு அழைக்கவில்லை என்று நம்புகிறேன். நிச்சயமாக இந்த திரைப்படம் 100% வெற்றி பெறும் என்று பேசியுள்ளார்.





