கேஜிஎப் படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் படம் சலார். பிரபாஸ், பிருத்விராஜ் நடித்த இந்த படம் பான் இந்தியா படமாக உள்ளது. ஏற்கனவே பாகுபலி, ஆர்ஆர்ஆர், கேஜிஎப், பதான், ஜவான் போன்ற படங்களுக்கு, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அபரிமிதமான வரவேற்பு கிடைத்ததால், வசூல் மழை பொழிந்தது.
இந்நிலையில் திரைக்கு வந்த சலார் படமும் மிகப்பெரிய வசூலை பெற்றுத் தரும் எதிர்பார்த்த படக்குழுவினருக்கு கிடைத்தது பலத்த ஏமாற்றம்தான். வழக்கமான ஹீரோயிசம் நிறைந்த பில்டப் கதைகள் வெற்றி பெற்றாலும், இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் போதிய ஆதரவு கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை.
சமீபத்தில் தீபாவளிக்கு வௌியான கார்த்தி நடித்த ஜப்பான் படம், ரசிகர்களை வெறுப்பேற்றிய மொக்கை படமாக அமைந்தது. ஜப்பான் படம் பார்க்க வந்தவர்கள், இடைவேளைக்கு பிறகு உயிர்பிழைத்தால் போதும் என தியேட்டரை விட்டு ஓடிய ரசிகர்கள் அதிகம். ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் படத்துக்கு அதிக கூட்டம் வந்ததற்கு ஜப்பான் படமும் மிக முக்கிய காரணமாக அமைந்தது.
சமீபத்தில் வெளியான சலார் படம் பல தியேட்டர்களில் ஓடி வருகிறது. இதற்கிடையே வெளியான ஆயிரம் பொற்காசுகள் படத்துக்கு, ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்தது. இதனால் கடந்த வாரம், ஞாயிறு அன்று சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் சலார் திரைகளின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டு. அந்த திரைகளில் ஆயிரம் பொற்காசுகள் காட்சிகள் அதிக எண்ணிக்கையில் திரையிடப்பட்ட தகவல் வெளியானது.
இதே நிலையில் இப்போது மற்றொரு படமும், சலார் படத்துக்கு டாட்டா காட்டிவிட்ட முன்னேறி சென்றுள்ளது. சிஎஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன், கார்த்திகா முரளிதரன் நடித்த படம் சபாநாயகன். காதல், காமெடியை மையக்கருவாக கொண்டு ஜாலியான ஒரு திரைக்கதையில் இந்த படம் எடுக்கப்பட்டு திரைக்கு வந்துள்ளது.
இந்த சூழலில் சலார் ரிலீஸ் செய்யப்பட்டுள்ள மால் தியேட்டர்களில், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் சலார் படத்தை விட சபாநாயகன் படத்துக்கு ரசிகர்கள் வரவேற்பு மிக அதிகமாக இருந்து வருகிறது. அதனால் அதிக இருக்கை எண்ணிக்கை கொண்ட பெரிய திரை காட்சிகள் சபாநாயகன் படத்துக்கு ஒதுக்கப்பட்டு, சலார் படம் திரையிடும் காட்சிகள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில், நகரங்களில் இது நடந்துள்ளது. அதனால் கதைதான் முக்கியம். பெரிய டைரக்டர், பெரிய நடிகர்கள் பில்டப் எல்லாம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் செல்லுபடியாகாது என இப்போது நிரூபணமாகியுள்ளது.





