கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய காந்தாரா சாப்டர் 1 நேற்று வெளியானது. இந்த படம் குறித்து சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன் தனது பதிவில் கூறியிருப்பதாவது, இந்த படத்தின் கதை என்னவென்றால் ஈஸ்வர பூந்தோட்டம் என்ற பகுதியில் அரிய வகையான மிளகு ஏலக்காய் தேன் பட்டை போன்றவை கிடைக்கின்றன. அது மட்டுமின்றி அந்த பகுதியில் தெய்வ சக்தியும் இருக்கிறது.
அதனால் அந்த இடத்தை ஆட்டையை போட்டு விட வேண்டும் என இரண்டு குழுக்கள் நினைக்கின்றன. அதுமட்டுமின்றி ராஜா ஒருவரும் நினைக்கிறார். அதை தடுக்கவும் போரில் காந்தாரா மக்களை அந்த தெய்வம் காப்பாற்றுகிறதா இல்லையா என்பதுதான் இந்த படத்தின் கதை.
காந்தாரா முதல் பாகத்தில் ஒவ்வொரு சம்பவமும் உண்மைக்கு மிக நெருக்கமாக எடுத்திருப்பார்கள். அதுவே அந்த படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. ஆனால் இந்த படத்தை பொருத்தவரை ஒரு பேஃண்டஸி திரைப்படமாக எடுக்கிறேன் என்று முழுக்க முழுக்க செயற்கைத்தனமான ஒரு படத்தை எடுத்து வைத்திருக்கிறார்கள்.
படத்தில் புலி தேவாங்கு குதிரை எல்லாம் வருகின்றன. அந்த காட்சியை திரையில் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. ஆனால் ஏன் வருகிறது என்று தான் தெரியவில்லை. அதுமட்டும் இன்றி படம் முதல் பாதி முழுவதுமே கதை எதை நோக்கி செல்கிறது என்றே தெரியவில்லை. அதை கண்டுபிடிப்பதற்கு மிகவும் சிரமமாக இருந்தது.
படத்தின் 2வது பாதியில் தான் பெரிய மிகப்பெரிய டிவிஸ்ட் வருகிறது. அதன் பிறகுதான் படமே விறுவிறுப்பாகிறது. காந்தாரா படத்தில் கிளைமாக்ஸில் ரிஷப் ஷெட்டிக்கு சாமி வந்து ஆடுவது கடவுள் பக்தி இருப்பவர்கள் கடவுள் பக்தி இல்லாதவர்கள் என அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துவிடும்.
அதுபோல தான் இந்தபடத்திலும் டிவிஸ்ட் வைத்திருக்கிறார்கள். ஆனால் இந்த படத்திலும் அதே வராகி அம்மன் பாட்டை போட்டு ஒப்பேத்தி இருக்கிறார்கள். ஆனால் சாதாரண மக்கள் இந்த படத்தை கொண்டாடுவது சந்தேகம் தான் என்று ப்ளு சட்டை மாறன் தனது விமர்சனத்தில் கூறியிருக்கிறார். அதே நேரத்தில் மேக்கிங்கில் உலக தரத்தில் இந்த படம் இருப்பதாக படம் பார்த்த ரசிகர்கள் பலரும் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.





