இன்றைய நவீன உலகில் பெரும்பாலானோர் இணையத்திலேயே மூழ்கிக் கிடக்கின்றனர். இவர்களில் சிலர் தங்களுக்கு பிடித்தமான செயல்களை வீடியோ எடுத்து யூ டியூப், இன்ஸ்டாகிராமில் வெளியிட அது பலருக்கும் பிடித்து போவதால் திடீரென செலிபிரிட்டியாக மாறுகின்றனர்.
இப்படியாக மக்களிடையே அறியப்பட்டவர் தான் கோவையைச் சேர்ந்த டி டி எஃப் வாசன். இளைஞர் ஆன இவர், தனது பைக்கில் வெளியூர்கள், வெளி மாநிலங்களுக்கு சென்று அதை வீடியோவாக வெளியிட்டு சம்பாதித்து வருகிறார். இவரின் வீடியோவை பார்ப்பதற்கு என்றே தனி கூட்டம் இருப்பதால், குறுகிய காலத்தில் பலராலும் அறியப்பட்டார்.
2021 ஆம் ஆண்டு இவரது பிறந்த நாளை அவரது ரசிகர்கள் பிரம்மாண்டமாக கொண்டாடினர். இதற்காக கோவையில் உள்ள ஓட்டலில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க, டிடிஎப் வாசனை பார்க்க 2k கிட்ஸ்கள் திரண்டனர். கொரோனா சமயத்தில், இப்படி மிகப்பெரிய கூட்டம் திரண்டதால் பரபரப்பாக பேசப்பட, அப்போதுதான் டி டி எப் வாசன் யார் என்பது பலருக்கும் தெரிய வந்தது.
தனக்கு கிடைத்த இந்த பிரம்மாண்ட வரவேற்பை பார்த்ததும் மிதமிஞ்சி போன வாசன், தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்க ஆரம்பித்தார். அதி வேகமாக பைக்கை ஓட்டுவது, சாகசம் என்ற பெயரில் சாலையில் பைக்கை ஓட்டி பிறரை அச்சுறுத்துவது என அவரது சேட்டைகள் தொடர்ந்து வந்தன. இது ஒரு பக்கம் இருக்க, தனக்கு கிடைத்த ரசிகர்களை சரியாக பயன்படுத்தி திரைத்துறையில் களமிறங்க முடிவு செய்தார் வாசன்.
திரு வி க பூங்கா என்னும் ஓடாத படத்தின் இயக்குனரோடு அவர் கைகோர்க்க, படத்திற்கு மஞ்சள் வீரன் என பெயரிடப்பட்டது. இதற்கான சூட்டிங் பணிகள் நடந்து வரும் நிலையில், காஞ்சிபுரம் அருகே விபத்தில் சிக்கினார் வாசன். இது தொடர்பான வீடியோ வெளியாக, அவர் அதிவேகமாக பைக்கை ஓட்டி வீலிங் செய்த போது விபத்தில் சிக்கியது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
தற்போது முன் ஜாமின் கேட்டு அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். அப்போது காவல்துறை தரப்பிலான வாதத்தில், மூன்று லட்ச ரூபாய் பாதுகாப்பு உடையை அணிந்ததால் அவர் உயிர் பிழைத்தார். இவரைப் பின் தொடரும் பலர் அதிவேகமாக பைக் ஓட்டி திருட்டு சம்பவங்களில் ஈடுபடுகின்றனர் எனக் கூறியது. அனைத்து தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிமன்றம், விளம்பரத்திற்காக இப்படி செயல்படும் டிடிஎப் வாசனின் யூடியூப் சேனலை முடக்க வேண்டும். அவரது பைக்கை எரிக்க வேண்டும் என்று காட்டமாக கூறி ஜாமீன் மனு மீதான விசாரணையை ஒத்தி வைத்தது.





