நடிகர் சந்தானம் நடிப்பில் அடுத்ததாக நாளை 16ம் தேதி வெளிவர உள்ள படம் டிடி நெக்ஸ்ட் லெவல். இந்த படத்துக்கு ஏற்கனவே ஒரு பஞ்சாயத்து இருந்து வருகிறது. தில்லுக்கு துட்டு என்ற பெயரில் சந்தானம் நடித்த படம் 2 பாகங்களாக வெளியாகி வெற்றி பெற்றது. இந்த படங்கள் காமெடி காதல் திரில்லர் என ரசிகர்களை மிகவும் கவர்ந்து வரவேற்பை பெற்றன.
இந்நிலையில் டிடி நெக்ஸ்ட் லெவல் என டிடி என தங்களது முந்தைய படங்களின் தொடர்ச்சியாக உள்ளதாக, ஏற்கனவே தில்லுக்கு துட்டு படங்களை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ஆர்யா, படத்தின் நாயகன் சந்தானம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதுகுறித்த வழக்கு கோர்ட்டில் இருந்து வருகிறது.
இந்த விவகாரம் ஒருபுறம் இருக்க டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் இடம்பெற்ற கிஸ்ஸா 47 என்ற பாடலில் திருப்பதி ஏழுமலை வெங்கடேச பெருமாளின் புகழ்பாடும் ஸ்ரீனிவாசா கோவிந்தா என்ற பாடலை கலாய்க்கும் விதமாக கோவிந்தா கோவிந்தா என்ற வரிகளுடன் பாடல் வெளியானது. இது பெருமாளை வழிபடும் பக்தர்களை பெரிய அளவில் காயப்படுத்தியது.
இதையடுத்து ஆந்திராவில் துணை முதல்வராக உள்ள ஜனசேனா கட்சியினர் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. 2 தினங்களுக்கு முன்பு திருப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்ற முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் அங்கிருந்த ஜனசேனா கட்சியினர் இதுகுறித்து புகார் தெரிவித்தனர்.
இதை கவனத்தில் எடுத்துக்கொண்ட திருப்பதி தேவஸ்தானம் போர்டும் உடனடியாக நடவடிக்கை எடுத்தது. டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் பெருமாள் சுவாமியை அவமதிக்கும் விதமான பாடல் இடம்பெற்றது கண்டிக்கதக்கது. இதற்கு நஷ்ட ஈடாக ரூ. 100 கோடி வழங்க வேண்டும். சர்ச்சைக்குரிய அந்த பாட்டை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பியது.
மேலும் தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுக அரசு நாத்திக அரசு என்பதால், இதுபோன்ற இறைவனை அவமதிக்கும் பாடல்கள் குறித்து திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது எந்த விமர்சனமும் எழுந்தது. இந்த விவகாரம் மேலும் விஸ்வரூபம் எடுத்த நிலையில், இப்போது டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் இருந்து கிஸ்ஸா 47 என்ற பாடல் அடியோடு நீக்கப்பட்டதாக படக்குழு தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.





