நடிகர் அமிதாப் பச்சன், பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர். வயது முதிர்ந்த காலத்திலும், இன்னும் கலை ஆர்வம் குறையாமல் சில படங்களில் சிறப்பு தோற்றங்களில் நடிக்கிறார். ரஜினி 170 படத்திலும், அவர் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அமிதாப் பச்சன், விளம்பர படங்களில் அதிகமாக நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
ஆன்லைன் வணிக தளங்களில் ஒன்றான பிளிப்கார்ட் விளம்பரத்தில் சமீபத்தில் அமிதாப் பச்சன் நடித்திருந்தார். ஆண்டுதோறும் பிக் பில்லியன்டே என்ற சிறப்பு தள்ளுபடியில், பொருட்களை சலுகை விலையில் விற்பனை செய்யும் இந்த விளம்பரத்தில் அமிதாப் பச்சன் நடித்திருந்தார். அதுதான் தற்போது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
அந்த விளம்பரத்தில், பிளிப்கார்ட் தரும் சலுகைளை போன்று, சில்லரை விற்பனை கடைகளில் விற்கப்படும் பொருட்களுக்கு நிச்சயம் கிடைக்காது என, அமிதாந் பச்சன் கூறி இருக்கிறார். நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், இந்த விளம்பரத்தில் அமிதாப் பச்சன் பேசிய வசனங்கள் நுகர்வோரை, தவறான விதத்தில் வழிநடத்துவதாக உள்ளது.
இந்த விளம்பரத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும். இந்த விளம்பரத்தில் நடித்த நடிகர் அமிதாப் பச்சனுக்கு ரூ. 10 லட்சம் அபராதம் விதிக்க வேண்டும். மேலும், இத்தகைய விளம்பரத்தை வெளியிட்ட பிளிப்கார்ட் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (சிஐஏடி) மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.
ஆன்லைன் வர்த்தகத்தால், ஏற்கனவே சிறு வியாபாரம், சில்லரை வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமிதாப் பச்சன் போன்ற பெரிய நடிகர்கள் இதுேபான்ற வர்த்தக விளம்பரங்களில் தொடர்ந்து நடிப்பதால் எங்களுக்கு கடுமையான பாதிப்பும், நஷ்டங்களும் ஏற்படுகிறது. இத்தகைய விளம்பரங்களை தடை செய்யவும் சிஐஏடி வலியுறுத்தி உள்ளது.
சினிமாவை விட, இதுபோன்ற வர்த்தக விளம்பரங்களில் நடித்து சினிமா நட்சத்திரங்கள், கோடிக்கணக்கில் சம்பாதித்து விடுகின்றனர். தமிழ் சினிமாவிலும் சரத்குமார் போன்ற சில நடிகர்கள், ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தீபாவளி, பொங்கல் வந்துவிட்டால், நடிகர், நடிகையர் விளம்பரங்களில் பல கோடி ரூபாய்களை அள்ளி விடுகின்றனர். இவர்களால் பெரிய நிறுவனங்கள் பலமடங்கு லாபம் அடைந்து, சிறு நிறுவனங்கள், சில்லரை வர்த்தகங்கள் கடுமையான வீழ்ச்சியை சந்திக்கின்றன.





