தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர் தனுஷ். அங்கிருந்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை என தனது நடிப்பிற்கு தீனி போடும் வகையில் ஆன கதாபாத்திரங்களை ஏற்று நடித்த தனுஷ், இன்று உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார்.
ஆடுகளம் மற்றும் அசுரன் ஆகிய இரண்டு திரைப்படங்களுக்காக அவர் தேசிய விருதையும் வாங்கி விட்டார். நடிப்பு மட்டுமல்லாமல் பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல்வேறு திறமைகளுடன் அவர் சினிமாவில் வலம் வருகிறார். அனைத்தையும் தாண்டி இயக்கத்திலும் கால் பதிக்க முடிவு செய்த தனுஷ் தனது முதல் திரைப்படம் ஆக பவர் பாண்டியை இயக்கினார்.
ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா, சாயா சிங் ஆகியோர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இளமையில் கை கூடாத காதலை முதுமையில் நினைத்துப் பார்க்கும் இருவரின் கதாபாத்திரத்தை மிக அழகாக எழுதி இருந்தார் தனுஷ். காதல் காட்சிகள் மிகவும் உணர்வுபூர்வமாக இருந்ததால் இந்த திரைப்படம் பேசப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அவர் நாகார்ஜூன் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க ஆரம்பித்தார். ஆனால் அந்த திரைப்படம் பெரிதாக கைகூடவில்லை. திடீரென படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்ட சூழலில், தற்போது தனது ஐம்பதாவது படமான ராயனை தனுஷ் இயக்கி முடித்திருக்கிறார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் வரும் 26 ஆம் தேதி வெளியாகிறது. இதனிடையே ராயன் திரைப்படத்தை முடித்த சிறிய இடைவெளியில், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தை தனுஷ் இயக்கினார். இளைஞர்களின் காதலை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. பவிஸ், அனிகா, மேத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர் உள்ளிட்டோர் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.
சரத்குமாருக்கும் படத்தில் ஒரு முக்கிய ரோல் இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி அடுத்தடுத்த திரைப்படங்களை இயக்கி வரும் தனுஷ் அடுத்ததாக, பிரகாஷ்ராஜை வைத்து ஒரு படத்தை இயக்கப் போகிறார். இதனை அந்த நடிகரை உறுதி செய்து இருக்கிறார். இது குறித்து பேசிய பிரகாஷ்ராஜ், அடுத்ததாக தனுஷ் இயக்கத்தில் தான் நடிக்கப் போவதாகவும், இதில் நித்யா மேனனும் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். இதில் தனுஷ் நடிக்காத நிலையில், படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.





