தமிழ் சினிமாவில் கதைக்குதான் பஞ்சம் என்றால், டைட்டிலுக்கும் பயங்கர பஞ்சம் நிலவுகிறது. பல நூறு கோடிகளை செலவு செய்து படம் எடுக்கும் நிலையில், அந்த படத்துக்கு ஒரு அட்ராக்டிவ் ஆன டைட்டில் வைக்க இயக்குனரோ, தயாரிப்பாளரோ அதிகம் மெனக்கெடுவதும் இல்லை. யோசிப்பதும் இல்லை.
அதனால் பெரும்பாலான படங்களில் கதாநாயகன் பெயரையே படத்துக்கும் டைட்டிலாக வைக்கின்றனர். ரஜினி, கமல், விஜய் படங்களுக்கு அதுவே வழக்கமாகி விட்டது. இல்லை என்றால் குருவி, சிங்கம், கழுகு, மைனா, ஈ, தேள் என பெயர் வைக்கின்றனர். என் ஆளோட செருப்ப காணோம், ஏண்டா தலைக்கு எண்ணெய் வைக்கலே என்ற தலைப்பில் எல்லாம் படங்கள் வருகின்றன.
அந்த காலத்தில் படத்தின் பெயர்களே கண்ணியமாக, கவிதையாக இருக்கும். அலைகள் ஓய்வதில்லை. இன்று போய் நாளை வா, கடலோர கவிதைகள், 16 வயதினிலேயே சிப்பிக்குள் முத்து, தூறல் நின்னு போச்சு, அந்த 7 நாட்கள், மௌன கீதங்கள், தங்கைக்கோர் கீதம், குடியிருந்த கோவில், இதயக்கனி என பெயர்களே வசீகரிக்கும்.
ஆனால் இப்போது டைட்டில்களுக்கு பஞ்சம் என்பதால் பழைய ஹிட் படங்களின் பெயர்களையே தட்டி தூக்கி விடுகின்றனர். கடந்த 38 ஆண்டுகளுக்கு முன் 1986ம் ஆண்டில் ரஜினி, சத்யராஜ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற படம் மிஸ்டர் பாரத். இப்போது யூ டியூப் பிரபலம் பாரத் நடிக்கும் இந்த படத்துக்கும் மிஸ்டர் பாரத் என்றே பெயர் வைத்துள்ளனர்.
மிஸ்டர் பாரத் படம் குறித்து அதன் இயக்குனர் நிரஞ்சன் கூறியதாவது, இது மிகவும் எளிமையான கதைக்களத்தில் உருவாகும் படமாகும். கதாபாத்திரத்தை மையப்படுத்தி கதை நகரும். பிடிவாதமான குணம் கொண்ட ஒருவன் காதல் திருமணத்தை விரும்புகிறான். ஆனால் ஒரு பெண்ணே முன்வந்து அவனிடம் காதல் சொல்லும் போது அதை அவனால் உணரக்கூட முடியவில்லை.
இப்படி நிறைய ஆச்சரியங்களை கொண்ட பொழுதுபோக்கு படமாக தான் மிஸ்டர் பாரத் படம் உருவாகிறது. மற்றபடி ரஜினிகாந்த் நடித்த மிஸ்டர் பாரத் படத்திற்கும் இந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த தலைப்பை பயன்படுத்த அனுமதித்த ஏவிஎம் நிறுவனத்திற்கு நன்றி என்று இயக்குனர் நிரஞ்சன் கூறியிருக்கிறார்.





