இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படம், காலை 9 மணிக்கு தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிவிட்டது. தமிழ்நாடு தவிர கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கே படம் ரிலீஸ் செய்யப்பட்டு, ரசிகர் காட்சிகள் திரையிடப்பட்டு விட்டன.
மற்ற மாநிலங்களை காட்டிலும், தமிழ்நாட்டில் சினிமா ரசிகர்கள் லியோ படத்தை எப்படி விமர்சனம் செய்யப் போகின்றனர் என்பதுதான் மிக முக்கியம். அதனால், மதியம் 12 மணிக்கு பிறகே லியோ படம் குறித்த விமர்சனங்கள் தமிழகத்தில் பெரிய அளவில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், கேரளாவை பொருத்த வரை படம் சிறப்பாக இருப்பதாகவே முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, இன்று அதிகாலை 4 மணிக்கு எக்ஸ்சில் ( டிவிட்டர்) இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முக்கிய பதிவை ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அது கடித வடிவில் இருக்கிறது. லியோ படம் குறித்து விஜய், படக்குழு மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், முக்கிய வேண்டுகோள் ஒன்றையும் வைத்திருக்கிறார்.
என் கனவுகள் நனவாக எனக்கு வாய்ப்பளித்த விஜய் அண்ணாவுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்த படத்தை உருவாக்க ரத்தமும், வியர்வையும் சிந்தி உழைத்த ஒவ்வொருவரையும் மரியாதை செய்கிறேன்.இந்த ஆண்டின் துவக்கத்தில் துவங்கிய இந்த லியோ படம், தொடர்ந்து இரவு பகல் பாராமல் பலரது உழைப்பால் இன்று உருவாகி இருக்கிறது.
என் அன்பான ரசிகர்கள் என் மீது காட்டும் அன்புக்கும், அவர்கள் என் படங்களுக்கு தொடர்ந்து தந்து வரும் ஆதரவுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். இன்னும் சில மணி நேரங்களில் மிகப்பெரிய அனுபவங்களை, திரில் நிறைந்த அனுபவங்கள் லியோ படம் மூலம் உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கப் போகிறது.
இந்த படத்தின் சஸ்பென்ஸ் காட்சிகளை, முக்கிய விஷயங்களை தயவு செய்து மற்றவர்களுக்கு பகிராதீர்கள். தயவு செய்து இதை என் வேண்டுகோளாக வைக்கிறேன். படம் பார்க்கும் ஒவ்வொருவரும் அந்த அனுபவத்தை அவரவரே பெற வேண்டும் என விரும்புகிறேன். லியோ எல்சியுவா, இல்லையா என்ற உங்கள் கேள்விக்கு, சில மணி நேரங்களில் லியோ பதிலளித்து விடும், என டிவிட்டரில் பதிவிட்டு இருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.





