இயக்குனர் சசிக்குமாரிடம் உதவியாளராக இருந்தவர் முத்தையா. இவரது முதல் திரைப்படமான குட்டி புலி, 2013 ஆம் ஆண்டு வெளியானது. சசிகுமார் ஹீரோவாக நடித்த அந்த திரைப்படம், ஸ்ரீவில்லிபுத்தூரை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்டது. அதர பழசான திரைக்கதையில் உருவான அந்த திரைப்படம், கலவையான விமர்சனத்தையே பெற்றாலும் வசூலில் எந்த குறையும் வைக்கவில்லை.
இதன் பிறகு கார்த்தியுடன் இணைந்த முத்தையா கொம்பன் திரைப்படத்தை எடுத்தார். ராமநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. ஆனால் படம் வெளியாவதற்கு முன்பே கொம்பன் என்ற டைட்டில் காரணமாக சர்ச்சை எழுந்தது. நீதிமன்றம் வரை இந்த விவகாரம் சென்ற நிலையில், கடும் பிரச்சனைகளுக்கு மத்தியில் கொம்பன் திரைப்படம் வெளியாகி வசூல் சாதனை படைத்தது.
விமர்சன ரீதியாகவும் கொம்பன் திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்று முத்தையாவுக்கு பெயர் வாங்கி கொடுத்தது. இதனைத் தொடர்ந்து விஷாலை வைத்து மருது திரைப்படத்தை இயக்கினார் முத்தையா. இந்தத் திரைப்படமும் வசூல் ரீதியாக வெற்றி திரைப்படமாக அமைந்தது. தமிழ் சினிமாவில் பி மற்றும் சி சென்டர்களை குறி வைத்தே படங்களை நகர்த்த ஆரம்பித்தார் முத்தையா.
குறிப்பாக தென் மாவட்டங்களில் முத்தையா படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்ததால், அவரை தயாரிப்பாளர்கள் தேடிச் சென்றனர். இதைத்தொடர்ந்து கொடிவீரன், தேவராட்டம், புலிக்குத்தி பாண்டி ஆகிய திரைப்படங்களை அவர் இயக்கினார். இப்படியான சூழலில் முத்தையா திரைப்படங்கள் ஒரே மாதிரியாக இருப்பதாக கருத்துக்கள் என ஆரம்பித்தன. கிராமத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் அத்தனை திரைப்படங்களிலும் ஹீரோ முறுக்கு மீசையுடன் தொடை தெரிய வேட்டி கட்டி வருவதாக பலர் கிண்டல் அடித்தனர்.
ஆனால் இதையெல்லாம் காதிலேயே வாங்கிக் கொள்ளாத முத்தையா, கார்த்தியை வைத்து விருமன் மற்றும் ஆர்யாவை வைத்து காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் ஆகிய திரைப்படங்களை கொடுத்தார். ஆனால் இந்த திரைப்படங்கள் தென் மாவட்டங்களிலும் கூட வரவேற்பை பெறாததால் தோல்வி அடைந்தன. இப்படியான சூழலில் தனது அடுத்த படத்தை வெற்றியாக கொடுக்க மிகுந்த கவனத்துடன் முத்தையா இருக்கிறாராம்.
இதற்காக முதலில் அருண் விஜயை அவர் அணுகியதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் பாலாவின் வணங்கான் திரைப்படத்தை இன்னும் முடிக்காததால், நோ சொல்லிவிட்டாராம். பிறகு அக்னி நட்சத்திரம் கதையையே, கிராமத்துப் பின்னணியில் எடுக்க திட்டமிட்டாராம் முத்தையா. இதற்காக கவுதம் கார்த்திக் மற்றும் விக்ரம் பிரபு ஆகியோரை முத்தையா அணுக, அதற்கும் சரியான நேரம் கூடவில்லையாம். இதனால் தற்போது எஸ் ஜே சூர்யா பக்கம் தனது பார்வையை திருப்பி இருக்கிறாராம் முத்தையா. அவரை எப்படியாவது தனது கதையின் நாயகனாக நடிக்க வைக்க முத்தையா முயற்சித்து வருகிறாராம். வரும் நாட்களில் இது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





