தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களை தந்து கொண்டிருப்பவர் இயக்குனர் சுந்தர் சி. உள்ளத்தை அள்ளித் தா படம்தான் அவரது முதல் படம். பெரிய அளவில் வெற்றி பெற்றது. தொடர்ந்து மேட்டுக்குடி முறைமாமன் அழகான நாட்கள் கண்ணன் வருவான் ரெண்டு கிரி அருணாசலம் அன்பே சிவம் உனக்காக எல்லாம் உனக்காக என ஏகப்பட்ட வெற்றி படங்களை தந்தவர்.
இப்போது சுந்தர் சி இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். அவரது இயக்கத்தில் வருகிற 24ம் தேதி கேங்கர்ஸ் என்ற படம் ரிலீஸாக உள்ளது. அடுத்து மூக்குத்தி அம்மன் 2 என்ற படத்தை சுந்தர் சி இயக்கி வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். இந்த படத்திலும் சுந்தர் சி தான் நாயகனாக நடிக்கிறார்.
இயக்குனர் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக ஆரம்பத்தில் பணி செய்தவர் சுந்தர் சி. அவர் இயக்கிய முதல் படத்தில் கார்த்திக் ரம்பா நாயகன் நாயகியாக நடித்திருந்தனர். மேலும் உள்ளத்தை அள்ளித்தா படத்தில் கவுண்டமணி செந்தில் மணிவண்ணன் பாண்டு ஜோதிமீனா ஜெய் கணேஷ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் மற்றும் இயக்குனர் சுந்தர் சி கூறியதாவது, என்னுடைய முதல் படத்துக்கு உள்ளத்தை அள்ளித் தா என டைட்டில் வெச்சிருந்தேன். ஷூட்டிங் நடந்துக்கொண்டு இருந்தது. அப்போது ஒரு நாள் படத்தின் ஹீரோ நடிகர் கார்த்திக், என்னிடம் பேசும் போது, என்ன பாஸ் படத்துக்கு உள்ளத்தை அள்ளித் தான்னு பேரு வெச்சிருக்கீங்க என்று கேட்டார்.
அப்போது நான் அவரிடம், சார் நான் காதலிக்க நேரமில்லை மாதிரி ஒரு படம் பண்ண வேண்டும் என்று ஆசை. அதில் உங்க அப்பா முத்துராமன் சார் நடிச்சிருந்தார். அதனால் அந்த படத்தில் உள்ளத்தை அள்ளிக் கொஞ்சம் தா தா என்று ஒரு பாடல் காட்சி வரும். அதனால் என்னுடைய இந்த படத்துக்கு உள்ளத்தை அள்ளித் தா என டைட்டில் வைத்துவிட்டேன் என்று சொன்னேன்.
அதை கேட்டுட்டு நடிகர் கார்த்திக், இல்லே பாஸ் அது தப்பு, அது நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா தா என்றுதான் வரும் என்று கூறினார். அய்யய்யோ தப்பாவா டைட்டில் வெச்சுட்டோம் என்று தோணியது. ஆனால் ஏற்கனவே டைட்டில் எல்லாம் அறிவிச்சுட்டோம். அதனால் நெஞ்சத்தை அள்ளித் தா என மாத்த முடியாது. அப்படி தப்பா வெச்ச டைட்டில்தான் அது, என்று இயக்குனர் சுந்தர் சி ஓபனாக கூறியிருக்கிறார்.





