கோமாளி என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் பிரதீப் ரங்கநாதன். அதற்கு முன்னதாக குறும்படங்களை மட்டுமே இயக்கி வந்த அவர், இணையதளங்களில் அதனை வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் ரவி மோகன் அவருக்கு இயக்குனராகும் வாய்ப்பை கொடுக்க, சரியான கதைக்களத்தில் காமெடி பட்டாசாக வெடித்து சிதறியது கோமாளி.
90ஸ் கிட்ஸ் களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் பலருக்கும் ஃபேவரட் ஆனதால் கோமாளியை கொண்டாடினார்கள். இதன்பிறகு லவ் டுடே என்னும் திரைப்படத்தை இயக்கியதோடு அதில் கதாநாயகனாகவும் நடித்தார் பிரதீப் ரங்கநாதன். இந்தத் திரைப்படமும் அவருக்கு வெற்றி மேல் வெற்றி கொடுத்தது.
இன்றைய இளம் தலைமுறை காதலர்கள், தங்களது செல்போனை ஒருவருக்கொருவர் மாற்றிக் கொண்டால் என்னென்ன நடக்கும் என்பதை நகைச்சுவையாகவும் உணர்வுபூர்வமாகவும் கூறி இயக்கியிருந்தார் பிரதீப் ரங்கநாதன். அடுத்ததாக இயக்கத்தை கைவிட்டு முழுக்க முழுக்க நடிகர் ஆனார். இந்த முறை அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் அவர் நடித்தார்.
இது டிராகனாக கடந்த மார்ச் மாதம் வெளியாகி பட்டையை கிளப்பியது. வெறும் முப்பது கோடி ரூபாய் மதிப்பில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. அது மட்டுமல்ல 100 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் ஓடியது. இதன் வெற்றி விழா, கோலாகலமாக நடைபெற அதில் நடிகர் பிரதீப் ரங்கநாதன், இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் பங்கேற்றனர்.
மேடையில் பேசிய பிரதீப் ரங்கநாதன், இது என்னுடைய மூன்றாவது 100th நாள் நிகழ்ச்சி. கோமாளி திரைப்படம் முதலில் எனக்கு 100 நாள் வெற்றியை கொடுத்தது. அப்போது இது முதல் படம் தானே என்று பலர் கூறினார்கள். இரண்டாவதாக நானே இயக்கி நடிக்கும் போது பலரும் அதனை எதிர்பார்த்தார்கள். எனக்கும் அந்த வெற்றி மிக முக்கியமாக தேவைப்பட்டது. அதற்கும் நீங்கள் ஆதரவு கொடுத்தீர்கள். நூறு நாட்கள் வெற்றிகரமாக ஓடியது.
இந்த முறை நான் நடிகராக மட்டுமே செயல்பட்டதால் இதன் வெற்றியும் முக்கியமாக பார்க்கப்பட்டது. தற்போது அதுவும் நடந்திருக்கிறது. எல்லாமே ரசிகராகிய நீங்கள் தான் காரணம். ஓ மை கடவுளே திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க என்னை அஸ்வந்த் மாரிமுத்து கேட்டுக் கொண்டார். ஆனால் அப்போதே முடியாது நடித்தால் ஹீரோதான் என்று கூறிவிட்டேன். தற்போது அது நடந்து இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.





