மலையாள சினிமா மட்டுமல்ல தமிழ் தெலுங்கு கன்னடம் என பிற மொழிகளிலும், மிகவும் அறியப்பட்ட நடிகராக இருக்கிறார் ஃபகத் பாசில். இதற்கு மிக முக்கியமான காரணம், அவரது எதார்த்தமான நடிப்புதான். வில்லன் குணச்சித்திரம் நகைச்சுவை என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் சரி, அதில் நூற்றுக்கு நூறு சதவீதம் தனது பங்களிப்பை அளித்து திரையரங்குகளில் மேஜிக்கை செய்வார் பகத் பாசில்.
தமிழில் இவர் நடித்த திரைப்படங்கள் மிக மிக குறைவுதான் என்றாலும், அவரது கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் இப்போது வரை பேசப்பட்டு வருகின்றன. இதில் மிக முக்கியமாக மாமன்னன் திரைப்படத்தை கூறலாம். அந்தப் படம் வெளி வருவதற்கு முன்பு, பலரும் வடிவேலுவைதான் எதிர்பார்த்து இருந்தார்கள்.
அதுவும் வடிவேலு அரசியல்வாதியாக நடித்ததால், அவரது நடிப்பு எப்படி இருக்கும் என்பதுதான் இங்கு பலரையும் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் திரையில் நடந்ததே வேறு. சாதி வெறி பிடித்த ரத்தினவேலுவாக காட்சிக்கு காட்சி மிரட்டி இருந்தார் பகத் பாஸில். அதிலும் அவர், கூறும் ஒவ்வொரு வசனங்களும், அதன் நடிப்பும் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இதே போல் விக்ரம் திரைப்படத்திலும் பகத் பாசில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். சொல்ல போனால் அந்த திரைப்படத்தின் முதல் பாதியை, அவர்தான் நகர்த்திக் கொண்டு போயிருப்பார். இதேபோல், அண்மையில் வெளியான ஆவேசம் திரைப்படமும் அவரது நடிப்பிற்கு தீனி போடும் விதமாக அமைந்தது.
வெள்ளை சட்டை வெள்ளை பேண்ட் அணிந்து ரவுடியாக அவர் செய்யும் ஒவ்வொரு செயல்களும் திரையரங்குகளை கலகலப்பாக்கின. இப்படியான சூழலில், தற்போது ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்திலும் அவர் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, பகத் பாஸில் பற்றிய ஒரு முக்கியமான விஷயத்தை மலையாள நடிகர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.
பிரேமம் திரைப்படத்தில் நடித்திருந்த வினய் போர்ட் என்பவர் கூறி இருப்பதாவது, எனக்கு பாசிலை பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. அவர் ஒரு சாதாரண செல்போனை தான் உபயோகித்து வருகிறார். அது ஆண்ட்ராய்டு போன் கூட கிடையாது. அவருக்கு சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் அக்கவுண்டும் இல்லை. ஆனால் நாமெல்லாம் அதில் தான் நீண்ட நேரம் செலவழித்து வருகிறோம். ஆண்ட்ராய்டு போன் கூட இல்லாத பாசிலை, எப்படி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இயக்குனர்கள் தொடர்பு கொள்கிறார்கள் என்று தான் தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.





