உலக அளவில் திரைப்படங்களுக்கு ஆஸ்கர் விருது கிடைப்பது மிகப்பெரிய மரியாதையாக கௌரவமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஆஸ்கர் 2026 ஆண்டு விருதுக்கான சிறந்த திரைப்படங்களுக்கான பிரிவில் 4 இந்திய படங்கள் தேர்வாகி உள்ளன. இந்த தகவல் வெளியாகி இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திரை உலகில் மிகவும் மதிப்புமிக்க விருதாக ஆஸ்கர் விருது கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் 98வது ஆஸ்கர் விருதுகள் வரும் மார்ச் 15ம் தேதி வழங்கப்பட இருக்கின்றன. இதற்காக மொத்தம் 24 பிரிவுகளில் 98வது ஆஸ்கர் விருதுகள் திரைப்படங்களுக்கு வழங்கப்பட இருக்கின்றன.
ஒவ்வொரு பிரிவிலும் 5 நாமினேஷங்கள் இருக்கும். சிறந்த படத்துக்கான பிரிவுகளில் மட்டும் நாமினேஷன் எண்ணிக்கை 10 ஆக இருக்கும். இந்த சிறந்த திரைப்படத்திற்கான போட்டியில் பங்கேற்க மொத்தமாக 317 படங்கள் ஆஸ்கர் விருது தேர்வுக்குழுவுக்கு அனுப்பப்பட்ட நிலையில் அதில் இருந்து 201 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த படங்களுக்கு வாக்களித்து இறுதிப் பட்டியலில் 10 படங்கள் மட்டுமே தேர்வு செய்யப்படும்.
இந்த முறை ஆஸ்கர் விருதுக்கான தேர்வு பட்டியலில் இந்தியாவில் இருந்து 4 திரைப்படங்கள் தேர்வாகி உள்ளன. அதில் முதல் படம் டூரிஸ்ட் ஃபேமிலி. அபிஷன் ஜீவிந்த் இயக்கிய தமிழ் திரைப்படம். இதில் நடிகர் சசிகுமார் நடிகை சிம்ரன் பிரதான கேரக்டர்களில் நடித்திருந்தனர். கடந்த 2025ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை வெற்றியைப் பெற்ற படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக கடந்தாண்டில் வெளியான காந்தாரா சாப்டர் 1 நடிகர் ரிஷப் ஷெட்டி நடித்து அவரே இயக்கிய கன்னட படம். இதில் ருக்மணி வசந்த் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படமும் ரசிகர்களிடம் அபாரமான வரவேற்பை பெற்றது. 3வது படம் சிஸ்டர் மிட்நைட் படம், ராதிகா ஆப்தே நடிப்பில் கரண் காந்தாரி இயக்கிய இந்தி திரைப்படம். அடுத்து தன்வி தி கிரேட் என்கிற இந்தி படத்தை அனுபம்கெர் டைரக்ட் செய்திருக்கிறார். இந்த 4 படங்களும் இந்திய திரைப்படங்களும் ஆஸ்கர் விருது தேர்வு பட்டியலில் இடம் பிடித்துள்ளன.
இது தவிர மஹா அவதார் நரசிம்மா என்கிற அஸ்வின் குமார் இயக்கிய அனிமேஷன் திரைப்படமும் சிறந்த அனிமேஷன் படப் பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தியா சார்பாக நீரஜ் கய்வான் இயக்கிய ஹோம்பவுண்ட் திரைப்படம் வெளிநாட்டு சிறந்த படங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இந்நிலையில் தமிழில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படம் ஆஸ்கார் விருது பட்டியலில் தேர்வு செய்யப்பட்டு இருப்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.





