அஜித் குமார் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவான குட் பேட் அக்லி திரைப்படம் கடந்த பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தெலுங்கு மற்றும் கன்னட திரை உலகில் மிகப்பெரிய நிறுவனமான மைத்திரி மூவிஸ், இந்தத் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானது. ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைத்திருந்தார்.
ஏற்கனவே இதன் டீசர் மற்றும் ட்ரெய்லர் இரண்டும் வரவேற்பை பெற்ற நிலையில், படம் ஏகோபித்த எதிர்பார்ப்புடன் வெளியாகி வரவேற்பை பெற்றது. தான் ஒரு அஜித் ரசிகர் என்பதை ஒவ்வொரு காட்சியிலும் நிரூபித்து இருந்தார் ஆதிக் ரவிச்சந்திரன். படம் தொடங்கியதில் இருந்து அஜித் குமார் வரும் ஒவ்வொரு காட்சிகளையும் அவர் மாஸாக வைத்திருந்தார்.
திரிஷா, பிரசன்னா, சுனில், பிரபு உள்ளிட்டோரும் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார்கள். படத்தில் மூன்று விதமான கெட்டப்பில் வந்தார் அஜித். குட் பேட் அக்லியில் மற்றொரு முக்கிய விஷயமாக ரெட்ரோ பாடல்கள் இடம்பெற்றிருந்தன. சொல்லப்போனால் இதனை சற்று கூடுதலாகவே வைத்திருந்தார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.
ஒத்த ரூபாய் தாரேன், சகலகலா வல்லவன் உள்ளிட்ட திரைப்படங்களின் பாடல்கள் இடம் பெற்றிருந்தன. அதிலும் சுல்தானா பாடல் இந்த திரைப்படத்தின் மூலம் மீண்டும் ஹிட் ஆக, பலரும் அதனை இணையத்தில் ஒலிக்க விட்டனர். இது போக சிம்ரனும் படத்தில் கேமியோ ரோலில் வந்தார்.
அவர் இடம் பெற்ற காட்சியில் வாலி திரைப்படத்தின் பாடலை உபயோகித்திருந்தார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். பலரும் இந்த திரைப்படத்திற்கு கடும் விமர்சனத்தை முன் வைத்திருந்தாலும், கமர்சியல் ரீதியாக இந்த திரைப்படம் பேசப்பட்டதால் திரையரங்கிற்கு கூட்டம் கூட ஆரம்பித்தது. சொல்லப்போனால் படம் வெளியான முதல் ஐந்து நாட்களில் அது ஒரு கொண்டாட்ட களமாகவே இருந்தது என்று கூறலாம்.
இந்நிலையில் இரண்டாவது வாரமாகியும் குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு மவுசு குறையவில்லை. வார இறுதி நாட்களில் இன்னும் கூட்டம் கூடிக் கொண்டுதான் இருக்கிறது. படம் வெளியான 11 நாட்களில் இதுவரை தமிழகத்தில் மட்டும் 150 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம் ஒட்டுமொத்தமாக குட் பேட் அக்லி திரைப்படம் 260 கோடி ரூபாய் பார்த்திருப்பதாகவும், திரையிட்ட இடங்களில் எல்லாம் லாபம் ஈட்டி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.





