நடிகர் அஜீத்குமார் நடிப்பில் கடந்த 10ம் தேதி வெளியான படம் குட் பேட் அக்லி. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ்குமார் இசையில் உருவான இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்று வெற்றிப் படமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
குட் பேட் அக்லி படத்தில் அஜீத்குமாருடன் திரிஷா பிரசன்னா பிரபு சுனில் சிம்ரன் பிரியா வாரியர் அர்ஜூன்தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படம் வாலி தீனா வரலாறு பில்லா அமர்க்களம் என அஜீத்குமார் நடித்த பழைய படங்களின் ரெபரென்ஸ் ஆக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் 10க்கும் மேற்பட்ட பாடல்கள், அஜீத்குமார் நடித்த பழைய படங்களில் இருந்து பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இளமை இதோ இதோ என் ஜோடி மஞ்சக்குருவி ஒத்த ரூபா தாரேன் என பிற படங்களில் இருந்து எடுக்கப்பட்ட பாடல்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு இசைஞானி இளையராஜா காப்பிரைட் அடிப்படையில் ரூ. 5 கோடி வரை நஷ்ட ஈடு கேட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் அஜீத்குமார் இப்போது வெளிநாட்டில் கார் ரேஸ் பந்தயத்தில் கலந்துக்கொண்டுள்ள நிலையில் வரும் அக்டோபர் மாதம் வரை கார் ரேஸை முடித்துவிட்டு நவம்பரில் சென்னை திரும்ப உள்ளார். அதன்பிறகு மீண்டும் அவர் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் நடிகர் அஜீத்குமார் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படம் குறித்து கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் அஜீத்குமார் ரசிகர்களை மட்டுமே முழுமையாக திருப்திப்படுத்தும் படமாக இருப்பதால் இந்த படம் தொடர்ந்து வெற்றிக்கரமான வசூலை நிகழ்த்தி வருகிறது.
கடந்த 10ம் தேதி வெளியான இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் 10 நாட்களில் இதுவரை ரூ. 140 கோடி வரை வசூல் செய்துள்ளது. அதே போல் உலகளவில் இந்த படம் 10 நாட்களில் மொத்தம் ரூ. 228 கோடி என வசூலை அள்ளியுள்ளது. தமிழ்நாட்டில் விரைவில் ரூ. 150 கோடியும் உலகளவில் விரைவில் ரூ. 250 கோடியும் வசூலை அள்ளி விடும் என எதிர்பார்க்கப்படுவதால் ஏகே ரசிகர்கள் காலரை தூக்கி விட்டுக்கொண்டு காணப்படுகின்றனர்.





