தமிழ் சினிமாவில் 48 ஆண்டுகளாக இசை சக்ரவர்த்தியாக கொண்டாடப்படுபவர் இசைஞானி இளையராஜா. அவரது மனைவி ஜீவா பல ஆண்டுகளுக்கு முன்பே மறைந்து விட்டார். இளையராஜா, ஜீவா தம்பதிக்கு கார்த்திக் ராஜா யுவன் சங்கர் ராஜா என்ற 2 மகன்களும் பவதாரணி என்ற மகளும் இருந்தார். பவதாரணி பாடகியாக பல பாடல்களை பாடியவர்.
கடந்த ஆண்டில் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட பாடகி பவதாரணி உயிரிழந்தார். இது இளையராஜா, கங்கை அமரன் குடும்பத்தினரை மிகப்பெரிய துயரத்தில் ஆழ்த்தியது. தமிழ் சினிமா ரசிகர்களையும் மிகப்பெரிய வருத்தத்தில் மூழ்கடித்தது. ஏனெனில் பவதாரணியின் குரலில் ஒலித்த பாடல்கள் என்றென்றும் ரசிக்கும் குரலில் ஒலித்தவை.
கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரணி கடந்தாண்டு ஜனவரி 25ம் தேதி இலங்கையில் ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் தேனியில் உள்ள இளையராஜாவுக்கு சொந்தமான பண்ணை நிலத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
பவதாரணி மறைந்து ஓராண்டு ஆன நிலையில் இளையராஜா உருக்கமான ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, எனது அருமை மகள் பவதாரணி எங்களை விட்டு பிரிந்த நாள் இன்று. அன்பே உருவான மகள் பிரிந்த பின்புதான் அந்த குழந்தை எவ்வளவு அன்பு மையமாக இருந்திருக்கிறார் என்பது எனக்கு புரிந்தது.
காரணம் என் கவனம் எல்லாம் இசையிலேயே இருந்ததால் என் குழந்தைகளை கவனிக்காமல் விட்டது இப்போது எனக்கு வேதனையை தருகிறது. அந்த வேதனை தான் மக்களை ஆறுதல் படுத்தும் இசையாக எனக்கு கொஞ்சம் ஆறுதல் தருகிறது.
வருகிற பிப்ரவரி 12ம் தேதி பவதாரணியின் பிறந்தநாள். அன்றைய தினம் தான் அவருக்கு திதி வருவதால், அதை நினைவு நாள் நிகழ்ச்சியாக நடத்தலாம் என்று எண்ணி உள்ளேன். அதில் எல்லா இசைக் கலைஞர்களும் பங்கெடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். என் மகள் பவதா ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் என்று இளையராஜா அந்த ஆடியோவில் கூறியிருக்கிறார்.





