தமிழ்நாட்டில் பல குருமார்கள் இருந்து வருகின்றனர். இன்னும் சிலர் மறைந்து விட்டனர். எனினும் ஞானிகளான அவர்களை தங்களது வாழ்க்கை வழிகாட்டிகளாக குருவாக ஏற்றுக்கொண்டு பெரும்பாலான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவ்வப்போது அந்த மகான்களின் ஆசிரமங்களுக்கு சென்று ஆன்மிக யோகத்தில் ஈடுபடுகின்றனர். தியானம் செய்து மன அமைதி தேடுகின்றனர்.
அந்த வகையில் திருவண்ணாமலையில் ரமண மகிரிஷி ஆசிரமம் உள்ளது. அங்கு விசிறி சாமியார் யோகி ராம்சுரத்குமார் ஆசிரமமும் உள்ளது. அதே போல் பொள்ளாச்சியின் அருள்தந்தை வேதாந்திரி மகிரிஷி ஆசிரமம் உள்ளது. இன்னும் பல யோக மையங்கள் தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றன. அதன் கிளைகள் முக்கிய நகரங்களில் பல்வேறு பகுதிகளில் உள்ளன.
அந்த வரிசையில் கோவையில் வெள்ளியங்கிரி மலை அருகாமையில் ஈஷா யோகா மையம் உள்ளது. இதன் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் என்பவர், கர்நாடகாவை சேர்ந்தவர். அவர் கடந்த 1990களில் வெள்ளியங்கிரி மலைக்கு வந்து தனது யோக மையத்தை உருவாக்கினார். தியானலிங்கம் லிங்கபைரவி கோவில் மற்றும் ஆதியோகி முகப்பு சிலைகளை அவர் ஏற்படுத்தி உள்ளார்.
ஜக்கி வாசுதேவ் எனப்படும் அவர் சத்குரு என ஈஷா அன்பர்களால் அழைக்கப்படுகிறார். ஆண்டுதோறும் கோவையில் ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழாவை ஜக்கி வாசுதேவ் சிறப்பாக நடத்தி வருகிறார். கடந்த 15ம் தேதி நடந்த மகா சிவராத்திரி விழாவில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.
இதுவரை நடந்த மகா சிவராத்திரி விழாக்களில் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு பாரத பிரதமர் நரேந்திர மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டவர்கள் மட்டுமின்றி தமிழகத்தை சேர்ந்த பல அரசியல் தலைவர்கள் இந்த ஈஷா மையத்துக்கு வருகை தந்துள்ளனர். பல இந்திய நடிகர்கள் நடிகைகள் கிரிக்கெட் நட்சத்திர வீரர்கள் ஆன்மிகவாதிகள் என பலர் ஈஷா மையத்துக்கு வந்து சத்குரு ஜக்கி வாசுதேவை சந்திப்பது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இசைஞானி இளையராஜா சத்குரு குறித்து ஆவேசமாக பேசியிருக்கிறார். எல்லோருக்கும் பேதம் இல்லாத அன்பை காட்டுபவன் தான் சத்குரு. சத்குருன்னு சொல்லிக் கொள்பவன் எல்லாம் சத்குரு கிடையாது. சத்தியமாக சத்குரு ஆக முடியாது என்று இளையராஜா அப்போது பேசியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்தவர்கள் ஈஷா யோக மையம் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவை ஏன் இளையராஜா இப்படி பேசுகிறார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.





