நடிகர் அஜீத்குமார் நடிப்பில் 2 ஆண்டுகளுக்கு பின்பு வெளியான படம் விடாமுயற்சி. லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜீத்குமார் திரிஷா அர்ஜூன் ஆரவ் மற்றும் ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோர் நடித்த இந்த படம் எதிர்பார்த்த திருப்தியை ரசிகர்களுக்கு தரவில்லை.
அஜர்பைஜானில் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்ட இந்த படத்தில், இடைவேளை வரை படம் பார்க்கும்படியாக உள்ளது. அதன்பிறகு விடாமுயற்சி படம் கதைக்கும் படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத ஒரு படமாக உள்ளது. குறிப்பாக அஜீத்குமார் போன்ற மாஸ் ஹீரோ இதுபோன்ற கதையில் நடித்ததே தவறு என்று ஏகே ரசிகர்களே புலம்புகின்றனர்.
எனினும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அடுத்து வரப் போகும் குட் பேட் அக்லி படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என்று ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆனால் இப்போது குட் பேட் அக்லி படம் வரும் மே 1ம் தேதிக்கு தள்ளி வைக்கபட உள்ளதாக கூறப்படுகிறது.
இதில் விசேஷ தகவலாக மே 1ம் தேதி தொழிலாளர் தினம் என்பது மட்டுமின்றி அன்று நடிகர் அஜீத்குமாரின் பிறந்த நாளாகவும் உள்ளது. அதனால் மே 1ம் தேதி அஜீத்குமார் பிறந்த நாளில் குட் பேட் அக்லி படம் வெளியாக அதிக வாய்ப்புள்ளது. இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகலாம்.
இதற்கிடையே நடிகர் அஜீத்குமார் நடிக்க உள்ள அடுத்த படம், அதாவது அவரது 64வது படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இப்போது போர்ச்சுக்கல் நாட்டில் நடந்து வரும் கார் ரேஸில் நடிகர் அஜீத்குமார் பிஸியாக உள்ளார். வரும் அக்டோபர் மாதம் வரை அவருக்கு தொடர்ந்து கார் ரேஸ் உள்ளதால், அதன்பிறகு தான் அவர் படப்பிடிப்பில் பங்கேற்கும் வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் விடாமுயற்சி குட்பேட் அக்லி படங்களை தொடர்ந்து நடிகர் அஜீத்குமார் தனது 64 வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை இயக்குனர்கள் விஷ்ணுவர்தன் அல்லது சிறுத்தை சிவா இயக்க உள்ளதாக ஆரம்பத்தில் தகவல்கள் இருந்தன. ஆனால் இப்போது அஜீத்குமாரின் 64வது படத்தை டைரக்ட் செய்ய இருப்பது இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் என்றும், விரைவில் அதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல் வேகமாக பரவி வருகிறது.





