லியோ திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினியை வைத்து கூலி திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு, ஹைதராபாத் விசாகப்பட்டினம் மற்றும் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. கிட்டத்தட்ட இந்த திரைப்படம் இறுதி கட்டத்தை எட்டி விட்டதாக கூறுகிறார்கள். அனேகமாக ஜூன் மாதம் கூலி திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் ரஜினிகாந்த் தேவா என்னும் கதாபாத்திரத்தில் வருகிறார். சத்யராஜ் ஸ்ருதிஹாசன், சோபின் ஷாகீர், உபேந்திரா நாகர்ஜூனா உள்ளிட்டோரும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்று இருக்கிறார்கள். தங்கக் கடத்தலை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது.
அனிருத் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து சூட்டோடு சூட்டாக கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ். இது குறித்த அவர் ஏற்கனவே தெரிவித்துவிட்டார்.
தற்போது கார்த்தி, சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் நிறைவு பெறும் சூழலில், அடுத்ததாக அவரும் லோகேஷ் கனகராஜும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கைதி திரைப்படத்திற்கு இசையமைத்த, சாம் சி எஸ்தான் இதற்கு இசை அமைக்க உள்ளார்.
எல் சி யு வுக்குள் இந்த திரைப்படம் வர இருப்பதால் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனிடையே பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் லோகேஷ் கனகராஜ், தான் எங்கு சென்றாலும் சூர்யாவை வைத்து ரோலக்ஸ் மற்றும் இரும்புக்கை மாயாவி ஆகிய திரைப்படங்களை எடுப்பேன் என்று அடிக்கடி கூறி வருவார்.
இப்படியான சூழலில் தற்போது இரும்புக்கை மாயாவி திரைப்படம், பாலிவுட் நடிகர் அமீர் கானுக்கு சென்று இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பில் அமீர்கான் கலந்து கொண்டார். ஜெய்பூரில் இதன் காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்போது லோகேஷ் கனகராஜ், இரும்புக்கை மாயாவி குறித்த கதை கூறியதாகவும் இதற்கு அமீர்கான் ஓகே சொல்லிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சூர்யா ரசிகர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.





