தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. ஆரம்பத்தில் நிறைய வெற்றிப் படங்களை கொடுத்தவர். குறிப்பாக ஜெயம், சுந்தோஷ் சுப்ரமணியம், தனி ஒருவன், போகன், அடங்கமறு, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி பேராண்மை போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். ஆனால் சமீபகாலமாக அவரது படங்கள் தொடர்ந்து பிளாப் ஆகின்றன.
அதிலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இறைவன், அகிலன், சைரன் 108 மற்றும் தீபாவளிக்கு வெளியான பிரதர் போன்ற படங்கள் மிக மோசமான தோல்வியை சந்தித்தன. என்னிடம் இயக்குனர் கதை சொல்லும்போது பிரமாதமாக இருக்கிறது. ஆனால் திரையில் வரும்போது அதுபோல் படத்தை உருவாக்குவதில்லை. அதுதான் தோல்விக்கு காரணம் என்று ஜெயம் ரவியே ஒருமுறை வருத்தப்பட்டு கூறியிருந்தார்.
இதற்கிடையே அவரது குடும்ப வாழ்வில் ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக, தனது மனைவி ஆர்த்தியை பிரிந்துவிட்டார். சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார். மிக விரைவில் தனுஷ், ஐஸ்வர்யா, ஜீவி பிரகாஷ்குமார் – சைந்தவி வரிசையில் இவர்களும் திருமண முறிவில் பிரியும் நட்சத்திரங்களாக உள்ளனர்.
இந்த சூழலில் நடிகர் ஜெயம் ரவி தற்போது சுதா கொங்கரா இயக்கும் புதிய படத்தில் வில்லனாக நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் 25வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஸ்ரீ லீலா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் டிசம்பர் மாதம் துவங்க உள்ளது.
நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் போன்ற பெரிய நடிகர்களே வில்லனாக நடிக்கும்போது ஜெயம் ரவி நடிப்பது பெரிய விஷயமில்லை என்றாலும், இரட்டை வேடத்தில் ஒருவராக தான் அவர்கள் வில்லனாக நடிப்பது வழக்கம். ஆனால் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக ஜெயம் ரவி நடிக்க முக்கிய காரணங்கள் இருக்கின்றன.
இந்த படத்தில் ஜெயம் ரவி சம்பளம் ரூ. 18 கோடி ரூபாய், அவர் நடிக்க கால்ஷீட் தந்துள்ளது வெறும் 25 நாட்கள்தான். மேலும் கனா கண்டேன் படத்தில் பிருத்விராஜ், தனி ஒருவன் படத்தில் அரவிந்த் சாமி போல, டீசண்ட் ஆன வில்லனாக தான் ஜெயம் ரவி படத்தில் வர உள்ளார். ரத்தம் ஒழுக ஒழுக ஹீரோவிடம் அடிவாங்கும் வில்லன் கேரக்டர் கிடையாது, அதுபோன்ற காட்சிகளும் படத்தில் இல்லை என்ற காரணங்களால் இந்த படத்தில் ஜெயம் ரவி சம்மதித்தாக தகவல் வெளியாகி உள்ளது.





